நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் தலை துண்டித்துக் கொலை : ராஜஸ்தானில் பதற்றம்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளைக் கூறிய நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தையற்கடைக்காரர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஏராளமான போலீசார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Jun 29, 2022, 05:59 PM IST
  • நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் கொலை
  • கொலை செய்து வீடியோ வெளியிட்ட இருவர் கைது
  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதற்றம்
நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் தலை துண்டித்துக் கொலை : ராஜஸ்தானில் பதற்றம் title=

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். இதனைத் தொடர்ந்து, டெல்லி பாஜக சமூக ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நவீன் ஜிந்தால் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து பின்னர் அப்பதிவுகளை நீக்கினார். இதற்குக் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. 

இவ்விவகாரத்தினால் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், நுபுர் சர்மாவைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தும், நவீன் ஜிந்தாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முற்றிலும் நீக்கியும் பாஜக நடவடிக்கை எடுத்தது. 

மேலும் படிக்க | நபிகள் குறித்த சர்ச்சை : மேற்கு வங்க கலவரம் தொடர்பாக 200 பேர் கைது

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கன்னையா லால் என்ற தையற்கடைக்காரர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது கடைக்குத் துணி தைக்க வந்தது போல் நுழைந்த இரு இளைஞர்கள் கன்னையா லாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர். மேலும் அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

அப்பகுதியில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதய்ப்பூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுமெனவும், சம்மந்தப்பட்ட வீடியோவை யாரும் பகிர வேண்டாம் எனவும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | உத்தரபிரதேசத்தில் நீதித்துறையின் திறமை சோதிக்கப்படுகிறது: SC தலைமை நீதிபதிக்கு கடிதம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News