டெல்லி சென்ற டிடிவி தினகரன் கைது? கசியும் தகவல்

Last Updated : Apr 22, 2017, 03:01 PM IST
டெல்லி சென்ற டிடிவி தினகரன் கைது? கசியும் தகவல் title=

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரண்டாக பிரிந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என களம் கண்டது. இதனால், அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. 

இந்த நிலையில், அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கடந்த 16-ம் தேதி டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவினர் கைது செய்தனர். இதையொட்டி, சுகேஷ் தங்கியிருந்த அறைக்குள் சோதனையிட்ட காவல் துறையினர், ரூ.1.30 கோடியை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவு போலீஸார் அளித்த சம்மனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவர் பிற்பகல் 3.30 மணியளவில் குற்றப்பிரிவு போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷையும், தினகரனையும் ஒன்றாக வைத்தும் விசாரணை செய்யப்போவதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது தினகரன் அளிக்கும் பதிலை பொறுத்து அவரை உடனடியாக கைது செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

Trending News