+1, +2 வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்: தமிழக அரசு..!

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் தமிழக அரசு மாற்றம்; இது அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்!!

Last Updated : Sep 19, 2019, 09:51 AM IST
+1, +2 வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்: தமிழக அரசு..! title=

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் தமிழக அரசு மாற்றம்; இது அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்!!

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின்பு, இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றி 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது வரை இந்த நடைமுறை அமலில் உள்ளது. இந்தநிலையில், +1, +2 தேர்வுக்கான மதிப்பெண் முறையில் தமிழக அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 6 பாடங்களை தேர்ந்தெடுத்து படித்து வரும் நிலையில், 5 பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து படிப்பதற்கான முறையும் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 கல்வியில் மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் 4 முதன்மை பாடத்தொகுப்பு என மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணக்கர்கள் தேர்வு எழுதி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன், புதியதாக 3 முதன்மை பாடத்தொகுப்புகளை மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டிற்கு வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநருக்கு அரசு ஆணையிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இதனை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 500 மதிப்பெண்களுக்கு புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாட தொகுப்பினையோ அல்லது 600 மதிப்பெண்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாட தொகுப்பினையே மாணவர்கள் தெரிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் தெரிவு செய்யும் பாடத்தொகுப்பில் உள்ள மொழிப்பாடம், ஆங்கிலம் உள்பட அனைத்து முக்கிய பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு வரும் 2020 - 2021 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் பாடப்பிரிவுகள் தற்போது இருக்கின்றன. அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன.

இந்த பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும். இந்த பிரிவிலிருந்து கணிதப்பாடம் நீக்கப்பட்ட பிரிவை, மருத்துவ படிப்பிற்கு மட்டும் செல்லக்கூடிய மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் தமிழ் , ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என ஐந்து பாடங்கள் மட்டும் இருக்கும். வணிகவியல், கணக்குப்பதிவியல் பிரிவுகளுக்கும் இதேபோல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 

Trending News