பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மேலும் ஒரு கட்டாய மதமாற்றம்!

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட மற்றொரு சம்பவத்தில், 15 வயது கிறிஸ்தவ பெண் ஒருவர் பஞ்சாப் மாகாணத்தில் தனது ஆசிரியரால் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Last Updated : Sep 7, 2019, 01:15 PM IST
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மேலும் ஒரு கட்டாய மதமாற்றம்! title=

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட மற்றொரு சம்பவத்தில், 15 வயது கிறிஸ்தவ பெண் ஒருவர் பஞ்சாப் மாகாணத்தில் தனது ஆசிரியரால் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுமியின் தந்தை முக்தர் மாசிஹ் அளித்த புகாரின்படி, பைரா என்ற சிறுமி, லாகூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷெய்க்புரா நகரில் உள்ள ஒரு செமினரிக்கு தனது பள்ளி முதல்வர் சலீமா பீபியால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியரால் கொண்டு சென்று விடப்பட்ட பைரா செமினரியிலேயே இருந்ததாகவும், அவரது பெற்றோர் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பின்னர் பைராவின் பெற்றோர்கள் இந்த விஷயத்தை பஞ்சாப் அமைச்சரிடம் எடுத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
இந்த மத மாற்றம் ஆனது திங்கள்கிழமை நடந்ததாகவும், பைராவை செமினரியில் இருந்து புதன்கிழமை காவல்துறையினர் மீட்டதாகவும் தெரிகிறது. பின்னர் பைரா தார்-உல்-அமனுக்கு கொண்டுச்செல்லப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

பைராவிற்கு தற்போது 15 வயதே இருப்பதால், இந்த மத மாற்றம் சட்டப்படி திரும்ப பெறப்படும் என தெரிகிறது. ஏனெனில் பஞ்சாபில், வயது வந்தவருக்கான வயது வரம்பு 16-ஆக உள்ளது. எனவே பெற்றோரின் அனுமதி இன்றி மத மாற்றம் செய்யப்பட்ட மைனர் பைராவிற்கு செய்யப்பட்ட மதமாற்றம் செல்லாது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்துடன் சேர்த்து கடந்த வாரத்தில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து மூன்று மத மாற்ற வழக்குகள் வெளிவந்துள்ளது.

முன்னதாக செப்டம்பரில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்கூரில் உள்ள வணிக நிர்வாக நிறுவனத்திலிருந்து ஒரு இந்து சிறுமி கடத்தப்பட்டதாகவும், பலவந்தமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரேணுகா குமாரி என அடையாளம் காணப்பட்ட இளங்கலை மாணவி தனது கல்லூரியில் இருந்து கடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது பைராவின் விவகாரம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Trending News