ND திவாரி மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி கைது!

ND திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்!!

Last Updated : Apr 24, 2019, 11:58 AM IST
ND திவாரி மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி கைது! title=

ND திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்!!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக இருந்தவர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி டெல்லியில் வசித்து வந்தார். இவர், கடந்த 12 ஆம் தேதி உத்தரகாண்டுக்கு சென்றுவிட்டு 15 ஆம் தேதி வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். இந்நிலையில் ரோகித்தின் அம்மா உஜ்வாலா திவாரிக்கு கடந்த 16 ஆம் தேதி, போன் அழைப்பு வந்தது. அதில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ரோகித் மயங்கி கிடக்கிறார் என்று கூறப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனையில் ரோகித்தை சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் உடல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில், ரோகித் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. அவர் மரணம் இயற்கையானது அல்ல என்று மருத்து வ அறிக்கை தெரிவித்துள்ளதால் இதை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். உஜ்வா லாவுக்கு போன் வந்த போது, ரோகித் மனைவி அபூர்வா, உறவினர் சித்தார்த் மற்றும் வேலைக்காரப் பெண் வீட்டில் இருந்துள்ளனர். 

இதையடுத்து ரோகித் சேகர் திவாரியின் வீட்டுக்கு சென்ற போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அங்கு ஏழு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு வேலை செய்யவில்லை. ரோகித் திவாரியின் மனைவியிடம் உறவினர் மற்றும் வேலைக்காரப் பெண்ணிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்த நிலையில், என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Trending News