டெல்லியில் மொட்டை போட்டு விவசாயிகள் போராட்டம்!!

Last Updated : Apr 2, 2017, 12:43 PM IST
டெல்லியில் மொட்டை போட்டு விவசாயிகள் போராட்டம்!! title=

வறட்சி நிவாரணம், கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் 20_வது நாளாக இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 19 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிற மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், திமு.க., எம்.பி., கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் தங்களது கோரிக்கை நிறைவேற்றக் கோரி 20_வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

Trending News