முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 4, 2018, 07:36 PM IST
முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி title=

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டியை அடுத்து தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி பிரிமிக்ஹான் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸ் விளையாடியது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி 76 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 274 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக விளையாடிய விராத் கோலி 149(225) ரன்கள் குவித்து வெளியேறினார்.

இதனையடுத்து 13 ரன்கள் முன்னிலை பெற்று, தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியது இங்கிலாந்து அணி. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட்டினை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறது. 

மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்தில் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் வீரர் சாம் குரானின் அதிரடியால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கடைசியாக இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் மற்றும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 193 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் தேவை என்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. முதல் இன்னிங்ஸ் போல, இரண்டாவது இன்னிங்ஸிலும் விராத் கோலி நிலைத்து நின்று ஆட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. 

வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை என்ற நிலையில் விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினார்கள். கார்த்திக் 20 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா, விராத் கோலியுடன் இணைந்து நன்றாக ஆடினார். இந்தியா வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட சூழ்நிலையில், வெற்றி பெற 53 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி(51) அரைசதத்தை பூர்த்தி செய்து அவுட் ஆனார். 

 

இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக 162 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் தலா இரண்டு விக்கெட்டும், சாம் குரான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் சாம் குரான் தேர்வு செய்யப்பட்டார்.

 

Trending News