பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு நின்றுவிடக் கூடாது: இயக்குநர் வசந்தபாலன்

பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் வெறும் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு நின்றுவிடக் கூடாது என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2022, 08:45 PM IST
  • விருதுநகர் பெண்ணுக்கு நடந்தது பெரும் துயரம்
  • அந்தப் பெண் துணிச்சலாய் காவல்துறைக்கு வந்து புகார் கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது
  • முறையான சட்டப் பாதுகாப்பு உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்
 பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு நின்றுவிடக் கூடாது: இயக்குநர் வசந்தபாலன்  title=

பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் வெறும் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு நின்றுவிடக் கூடாது என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், அதை வீடியோவாக எடுத்து தொடர் மிரட்டல் விடுத்ததும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வேலூரில் திரைப்படம் பார்த்துவிட்டு வந்த இளம்பெண்ணைக் கடத்தி 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இப்படி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான விழிப்புணர்வும் மாவட்ட அளவில் காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 

''பொதுவாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலில் சிக்கிக் கொள்ளும்போது, ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்று யாரேனும் மிரட்டும்போது அதற்கு இணங்கிப் போய் தன்னையே அழித்து கொள்வதைத் தாண்டி காவல்துறையில் உடனடியாகப் புகார் தர முன்வர வேண்டும். சிறு நகரங்களின் கட்டுமானம், கட்டுப்பெட்டித்தனங்கள், வலிமையான எதிரிகள், சூழ்ந்திருக்கும் உறவினர்கள் இப்படி பல விசயங்கள் எளியவர்களை அதிகம் பாதிக்கும். எந்த வர்க்கத்தில் இருந்தாலும் பெண்கள் இதற்கு அதிகம் பயந்து உள்ளுக்குள்ளே புழுங்கி நடுங்குவார்கள். 

விருதுநகர் பெண்ணுக்கு நடந்தது பெரும் துயரம். அந்தப் பெண் துணிச்சலாய் காவல்துறைக்கு வந்து புகார் கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது. கயவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைத்து வருவார்கள். இது போன்ற பல சம்பவங்களை தினமும் பத்திரிகைகளில் பார்க்கிறோம். இனி இது போன்று பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக என்ன செய்யவேண்டும் என்கிற வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். 

மேலும் படிக்க | விருதுநகரில் ஒரு 'பொள்ளாச்சி' சம்பவம்; வீடியோ... மிரட்டல்... வன்புணர்வு....!!!

உதாரணத்திற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்குப் பட்டம் கொடுத்துப் பாராட்டுவதைப் போல. இதற்கும் முறையான வழிகாட்டுதல் குழு சிறு நகரங்களை, கிராமங்களை மனதில் கொண்டு சிறந்த வல்லுநர்கள் துணையோடு அமைக்கப்பட வேண்டும். முறையான சட்டப் பாதுகாப்பு உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அப்படி பாதிக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் மன நெருக்கடியைப் போக்க முறையான மருத்துவ உதவியும், அந்தப் பெண்ணிற்கு சிறந்த எதிர்காலம் அமையத் தேவையான சூழ்நிலையையும் அரசு உறுதி செய்யவேண்டும். வெறும் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு இந்த நிகழ்வு நின்றுவிடக் கூடாது. நாளை இன்னொரு பிரச்சினை பெரிதாகும் போது இந்தச் செய்தி மறக்கப்படும்''.

இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க |  விருதுநகர் : இளம்பெண் பாலியல் வன்கொடுமை திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் கைது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

 

Trending News