மும்பையை முடக்கிப்போட்ட அந்த 3 நாட்கள்: 26/11 நினைவு நாள்

12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நவம்பர் மாதத்தில் மும்பையில் நடந்த அந்த தாக்குதல் நாட்டிற்கு துக்கம், அதிர்ச்சி, கோபம், திகில், அச்சம் என அனைத்து உணர்வுகளையும் ஒன்றாக அளித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2020, 01:42 PM IST
  • 2008 ஆம் ஆண்டு 26/11-ல் மும்பையில் நடந்த தாக்குதல்களை நினைவுகூறும் நாள் இன்று.
  • பாகிஸ்தானிலிருந்து வந்த 10 தீவிரவாதிகள் மூன்று நாட்களுக்கு மும்பையை முடக்கிப் போட்டனர்.
  • 9 பேர் கொல்லப்பட்டு ஒருவன் உயிருடன் பிடிபட்டான்.
மும்பையை முடக்கிப்போட்ட அந்த 3 நாட்கள்: 26/11 நினைவு நாள் title=

நவம்பர் 26, 2008 அன்று நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் நமது நாட்டின் உறுதியை உலுக்கிப்பார்த்தது. அந்த சம்பவம் நம் நினைவில் ஒரு வடுவாக மாறி விட்டது. கடல் மார்க்கமாக வந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) ரயில் நிலையம், நரிமன் ஹவுஸ் வளாகம், லியோபோல்ட் கஃபே, தாஜ் ஹோட்டல் மற்றும் டவர், ஓபராய்-ட்ரைடென்ட் ஹோட்டல் மற்றும் காமா மருத்துவமனை ஆகியவற்றையும் தெற்கு மும்பையில் உள்ள மற்ற சில முக்கிய இடங்களையும் குறிவைத்தனர்.

மூன்று நாட்களுக்குத் தொடர்ந்த இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் (Terrorists) இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நீண்ட நேரம் தொடர்ந்த போராட்டத்தில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு ஒரு பயங்கரவாதி உயிரோடு பிடிபட்டான். ஆனால், இந்த தாக்குதலில் ​​சுமார் 190 பேர் இறந்தனர், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நவம்பர் மாதத்தில் மும்பையில் (Mumbai) நடந்த அந்த தாக்குதல் நாட்டிற்கு துக்கம், அதிர்ச்சி, கோபம் மற்றும் திகில் என அனைத்து உணர்வுகளையும் ஒன்றாக அளித்தது. எனினும், சிலரின் அசாத்திய தைரியம், துணிச்சல், கடமை உணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் அப்போது கண்கூடாகக் காண முடிந்தது.

இவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியவர்கள். மற்றவர்களை மீட்க முயற்சிக்கும் வேளையில் பயங்கரவாதிகளின் தோட்டாக்களை எதிர்கொண்டவர்கள். இந்த துணிச்சலான மனிதர்களில் சிலருக்கு அதுவே அவர்கள் வாழ்வின் இறுதித் தருணமானது.

26/11 தாக்குதல்களை (26/11 Attacks) நினைவுகூறும் இவ்வேளையில், அந்த வேளையில் தன்னலம் கருதாமல் உயிர் தியாகம் செய்த இந்த ஹோரோக்களையும் நினைவில் கொள்வோம்.

ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர்

மும்பை பயங்கரவாத தடுப்புப் படையின் தலைவரான ஹேமந்த் கர்கரே நவம்பர் 26 ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அழைப்பு வந்தபோது தாதரில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அவர் உடனடியாக தனது டிரைவர் மற்றும் மெய்க்காப்பாளர்களுடன் சிஎஸ்டி நிலையத்திற்கு புறப்பட்டார். பயங்கரவாதிகள் அப்போது காமா மருத்துவமனைக்கு அருகில் இருப்பதை அவர் அறிந்து கொண்டார். கர்கரே, போலீஸ் அதிகாரிகளான அசோக் காம்தே மற்றும் விஜய் சலாஸ்கர் ஆகியோர் இரண்டு பயங்கரவாதிகளைத் தேடினர். இறுதியில், அவர்கள் பயங்கரவாதிகளில் ஒருவரைப் பார்த்து, அவனுடன் சண்டையிட்டு காயப்படுத்தினர். அவன்தான் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் (Ajmal Kasab). ஆனால் இரண்டாவது பயங்கரவாதியை பிடிக்கும் முயற்சியில் மூவரும் கொல்லப்பட்டனர்.

துக்காராம் ஓம்பிளே

முன்னாள் ராணுவ வீரரான மும்பை காவலர் (Mumbai Police) துக்காராம் ஓம்பிளே மற்றும் அவரது சக போலீசார் கடத்தப்பட்ட காரில் வந்த இரண்டு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அவர்களில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதற்குப் பிறகு அசாத்திய துணிச்சலைக் காட்டிய துக்காராம், கசாபின் துப்பாக்கிக்கு முன்னால் சென்று அவனை பிடிக்க அவனை நெருங்கினார். அவன் சுடக்கூடும் என தெரிந்தும், இறந்தாலும் அவனை பிடித்து விட வேண்டும், தன்னைத் தவிர வேறு யாருக்கும் குண்டு படக்கூடாது என்ற உயரிய எண்ணத்துடன் கசாபை நேருக்கு நேர் எதிர்கொண்டார். அவனது துப்பாக்கி குண்டுகள் அவரைத் துளைத்தன. தன்னைச் சுட்ட துப்பாக்கியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால், பிற போலீசார் கசாபை நெருங்கி அனவைப் பிடிக்க முடிந்தது. அவரது மிக உயர்ந்த தியாகத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக சக்ராவால் அவர் கௌரவிக்கப்பட்டார்.

ALSO READ: ‘இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத போரை நடத்துவோம்’ இந்தியாவை மீண்டும் சீண்டும் பாகிஸ்தான்!!

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன்

எலீட் சிறப்புப் படைகளின் உறுப்பினரான மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் (Sandeep Unnikrishnan) 51 சிறப்பு அதிரடி குழுவின் சக என்.எஸ்.ஜி கமாண்டோக்களையும் விருந்தினர்களையும் பாதுகாத்து, தாஜ் ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகளிடம் சண்டையையிட சென்ற வேளையில் உயரிய உயிர்தியாகத்தை செய்தார். கையெறி குண்டுகள் மற்றும் ஏ.கே .47 ஆயுதங்களைக் கொண்ட ஒரு பயங்கரவாதியுடன் சண்டையிட்டபோது அவர் கொல்லப்பட்டார். இந்த போராட்டத்தில் அவர் ஒரு பயங்கரவாதியைக் காயப்படுத்தி, அனைத்து ஜிஹாதிகளையும் கீழே உள்ள உணவகங்களை நோக்கி செல்ல வைத்தார். அங்கிருந்து அவர்கள் தப்பிக்க வழி இல்லாமல் போனது. மேஜர் உன்னிகிருஷ்ணனுக்கு மரணத்திற்குப் பின் அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.

கரம்பீர் சிங் காங்

எல்லா ஹீரோக்களும் காவல்துறை சீருடைகளையோ ராணுவ சீருடைகளையோ அணிவதில்லை. கரம்பீர் சிங் காங் 2008 ல் தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலின் (Taj Hotel) பொது மேலாளராக இருந்தார். அவரைச் சுற்றி மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்துகொண்டிருந்த போதும், அவர் தப்பிக்க வழி இருந்த போதும், கடமை தவறாத அந்த ஹோட்டல் மேலாளர், நூற்றுக்கணக்கான விருந்தினர்களும் ஊழியர்களும் தப்பிக்க உதவினார். இந்த தாக்குதலில் காங் தப்பித்தாலும், அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் உயிர் பிழைக்க முடியவில்லை. ஹோட்டலின் ஆறாவது மாடியில் ஏற்பட்ட தீயில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

ALSO READ: பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு UAE புதிய விசாக்களை கொடுக்க மறுக்கும் காரணம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News