சமாஜ்வாடி கட்சியில் புதிய சமரச முயற்சி தோல்வி

Last Updated : Jan 8, 2017, 10:28 AM IST
சமாஜ்வாடி கட்சியில் புதிய சமரச முயற்சி தோல்வி   title=

 

லக்னோ: சமாஜ்வாடியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

உ.பி., ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாடியில் தந்தை முலாயம் சிங், அவருடைய மகனும் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்ட மோதல் அக்கட்சியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. 

கடந்த வாரம் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் யாதவ் தனக்குத்தான் கட்சியில் செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. நாங்கள்தான் உண்மையான சமாஜ்வாடி என்று கூறி இருந்தார். 

இரு தரப்பினருமே சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோருவதால் தேர்தல் கமி‌ஷன் இதுபற்றி முடிவை நாளை எடுக்கும் என்று அறிவித்து இருக்கிறது.

இதனால் கட்சி பிளவுபடாமல் இருக்க இறுதி கட்ட சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அகிலேஷ் யாதவை அவருடைய சித்தப்பா சிவபால் சிங் சந்தித்து பேசி தானும், அமர்சிங் எம்.பி.யும் பதவி விலகுவதாக தெரிவித்தார். இந்த திட்டத்தை அகிலேஷ் யாதவ் இதுவரை ஏற்கவில்லை. இதனால் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் லக்னோவில் முலாயம் சிங்கை அவருடைய தம்பி சிவபால் சிங், மூத்த தலைவர்கள் ஆசம்கான், அம்பிகா சவுத்ரி, சட்டசபை சபாநாயகர் பிரசாத் பாண்டே மற்றும் பல தலைவர்கள் சந்தித்து பேசினர். இதில் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

எனினும், அம்பிகா சவுத்ரி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கட்சியில் எல்லாமே நன்றாக உள்ளது. சமாஜ்வாடி ஒரே கட்சியாகத்தான் இருக்கும்’’ என்றார்.

Trending News