இன்று கூடுகிறது கொலீஜியம் - நீதிபதி ஜோசப் விவகாரத்தில் முடிவு கிடைக்குமா?

இன்று மதியம் கொலிஜியம் கூட்டம் மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் நீதிபதி ஜோசப் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : May 11, 2018, 10:05 AM IST
இன்று கூடுகிறது கொலீஜியம் - நீதிபதி ஜோசப் விவகாரத்தில் முடிவு கிடைக்குமா? title=

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனத்திற்கு கொலிஜீயம் குழு இரு நீதிபதிகளின் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அவர்கள் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆவார்கள். இதில் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் கே.எம்.ஜோசப் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜோசப் தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி நியமனம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு. இதற்கு காங்கிரஸ் உட்பட பலர் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த 2- ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் கூடியது. ஆனால் இந்த கூட்டத்தில் நீதிபதி ஜோசப் விவகாரம் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி ஜோசப்பை மத்திய அரசு நியமனம் செய்யாமல் வேறு எந்தவொரு நியமனமும் செய்யக்கூடாது என்று மற்ற மூத்த நீதிபதிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி செல்லமேஸ்வர், தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் கூட்டத்தை கூட்டும்படியும், கொலீஜியம் அமைப்பு மீண்டும் நீதிபதி ஜோசப்பின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் எனக் கூறி கடிதம் எழுதி இருந்தார். இதனால் இன்று மதியம் கொலிஜியம் கூட்டம் மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் நீதிபதி ஜோசப் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

Trending News