இனி இந்த கீப்பருக்கு ஐபிஎல் மட்டும்தான்... இந்திய அணியில் இடமே இல்லை - ஏன் தெரியுமா?

Team India: இனி இந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஐபிஎல் தொடருக்கு தயாராக வேண்டும் என்றும் அவருக்கு இந்திய அணியில் இடமே இல்லை எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகீரங்கமாக தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 19, 2024, 09:47 PM IST
  • இந்திய அணி 2 ஐசிசி கோப்பைகளை எதிர்நோக்கி இருக்கிறது.
  • இந்திய டெஸ்ட் அணி மற்றும் வொயிட் பால் அணியை கட்டமைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
  • அந்த வகையில், துலிப் டிராபி தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
இனி இந்த கீப்பருக்கு ஐபிஎல் மட்டும்தான்... இந்திய அணியில் இடமே இல்லை - ஏன் தெரியுமா? title=

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்ததை அடுத்து, 2025ஆம் ஆண்டில் இரண்டு ஐசிசி கோப்பைக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 2025 பிப்ரவரியில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் (ICC Champions Trophy 2025), ஜூனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் (ICC World Test Championship Final 2025) நடைபெற இருக்கிறது. தற்போது டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்த இரண்டு கோப்பைகளையும்தான் இந்தியா குறிவைத்திருக்கிறது. 

அந்த வகையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இந்திய அணி (Team India) 10 டெஸ்ட் போட்டிகளிலும், 8 டி20 போட்டிகளிலும், 3 ஓடிஐ போட்டிகளிலும் விளையாட உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். அதன்பின் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெறும், ஜூனில் WTC இறுதிப்போட்டி வருகிறது. 

ரெட் பால் கிரிக்கெட்டிலும் அதிக கவனம்

எனவே, வொயிட் பால் கிரிக்கெட்டை மட்டுமின்றி இந்த சீசனிலேயே ரெட் பால் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த இந்திய அணி முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், செப்டம்பரில் நடைபெற உள்ள துலிப் டிராபி தொடரில் (Duleep Trophy 2024) இந்திய அணி முக்கிய வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களே இந்திய அணியில் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர்களுக்கான தேடல் மட்டுமின்றி திறன் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர்களுக்கும் தேடல் உள்ளது எனலாம்.

மேலும் படிக்க | துலீப் டிராபியில் எனக்கு வாய்ப்பு இதனால் தான் கிடைக்கவில்லை - ரிங்கு சிங்

தற்போது ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் முன்னணியில் இருந்தாலும் கேஎஸ் பரத், துருவ் ஜூரேல், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் அந்த இடத்திற்கு கடுமையாக போட்டியிடுவார்கள். இவர்களில் இஷான் கிஷன் இந்தாண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டவர் ஆவார். இவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மட்டுமின்றி தொடர்ந்து தனது பார்மையையும் தொடர வேண்டும். இளம் வீரர் என்பதால் அவருக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இஷான் கிஷனுக்கு வாய்ப்பில்லை

இந்நிலையில், இஷான் கிஷன் (Ishan Kishan) தற்போதைய நிலைமையில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால் அவர் இனி ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்துவதே நல்லது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி (Basit Ali) அவரது யூ-ட்யூப் சேனலில் பேசியபோது,"இஷான் கிஷன் இப்போதைக்கு ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியா தொடர் வரை அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால், சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரையும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

அதிரடி காட்டும் இஷான் கிஷன் 

துலிப் டிராபி தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி அணியில் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார். இஷான் கிஷன் உடன் ஷ்ரேயாஸ் ஐயரும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது. அதுமட்டுமின்றி இஷான் கிஷன் உடன் இதே அணியில் கேஎஸ் பரத்தும் இடம்பெற்றுள்ளார். 

எனவே, துலிப் டிராபியில் டி அணியின் பிளேயிங் லெவனில் யாருக்கு எந்த இடம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது இஷான் கிஷன் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் புச்சி பாபு தொடரில் விளையாடி வருகிறார். ஜார்க்கண்டின் கேப்டனாக உள்ள இஷான் கிஷன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர் இடம் பெற மாட்டார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News