தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் வேலூர் வருகை -சத்யபிரதா சாகு

தேர்தல் நடைபெற உள்ள வேலூர் தொகுதியில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படை வருகை தந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 29, 2019, 06:43 PM IST
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் வேலூர் வருகை -சத்யபிரதா சாகு title=

சென்னை: தேர்தல் நடைபெற உள்ள வேலூர் தொகுதியில் பாதுகாப்பு பணிக்காக 20 கம்பெனி துணை ராணுவப்படை கோரப்பட்டுள்ளது. இதுவரை 19 கம்பெனி துணை ராணுவப்படை வருகை தந்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்படுகிறது. அதற்க்காக பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் கட்டுகட்டாக பணம் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 38 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 37 தொகுதியில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றனர். 

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. கடந்த ஜூலை 19 (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளார் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் தீப லட்சுமி உள்ளிட்ட 31 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான ஜூலை 23 ஆம் தேதி 3 பேர் மனுவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து வேலூர் மக்களவைத் தேர்தலில் 18 சுயேச்சைகள் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர் என இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், 179 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, "வழக்கமாக ஒரு தொகுதிக்கு 5 முதல் 6 கம்பெனி துணை ராணுவப்படையினர் மட்டுமே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் இம்முறை தேர்தல் நடைபெற உள்ள வேலூர் தொகுதியில் பாதுகாப்பு பணிக்காக 20 கம்பெனி துணை ராணுவப்படை கோரப்பட்டுள்ளது. இதுவரை 19 கம்பெனி துணை ராணுவப்படை வருகை தந்துள்ளனர் எனக்கூறினார்.

மேலும் இதுவரை வேலூர் தொகுதியில் தகுந்த ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 44 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Trending News