ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் -சசிகலா

கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என்று சசிகலா வருமானவரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 25, 2019, 03:24 PM IST
ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் -சசிகலா title=

கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என்று சசிகலா வருமானவரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி பணத்தை கடனாக வழங்கியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்த தகவல் ஏற்கனவே வெளியானது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

இதற்கிடையே 5 நாட்கள் சசிகலா பரோலில் வந்தார். அவர் பரோலில் வந்து சென்ற பிறகு ஒரு மாதம் கழித்து நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், சசிகலாவின் உறவினர் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீசு அனுப்பினார்கள். 22 ஆம் தேதி சசிகலாவின் ஆடிட்டர் வருமான வரித்துறைக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பினார். சசிகலா ஜெயிலில் இருப்பதால் உரிய தகவல்களை உடனடியாக திரட்டி முடியாது. எனவே, பதில் அளிப்பதற்கு 30 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

ஆனால், வருமான வரித்துறை 15 நாட்கள் அவகாசம் வழங்கியது. ஆனாலும், அந்த நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக டிசம்பர் 11 ஆம் தேதி சசிகலா சார்பில் ஆடிட்டர் தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், பண மதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் பற்றியும் எந்த தகவலும் தெரியாது என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் சசிகலாவுக்கு என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றன? அதில் எவ்வாறெல்லாம் வருமானம் வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு இருப்பதாக சசிகலா குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகியவற்றில் சசிகலா பங்குதாரர் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்பட்ட கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தனக்கு சொந்தமானது என்று சசிகலா கூறி இருப்பதாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்தோ தோகா கெமிக்கல், பார்மசூட்டிக்கல் லிமிடெட், ஆஞ்சநேயா பிரைவேட் லிமி டெட் ஆகியவற்றில் சசிகலா டைரக்டராக இருப்பதாகவும் அதில் கூறி உள்ளனர்.

Trending News