ரஜினி கதாநாயகனா? வில்லனா? திமுக கூறுவது என்ன?

ஆன்மிக அரசியல் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு இருந்தால் வெந்துபோக நேரிடும் என்பதை ரஜினி உணர வேண்டும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 2, 2018, 11:22 AM IST
ரஜினி கதாநாயகனா? வில்லனா? திமுக கூறுவது என்ன? title=

திராவிட முன்னேற்ற கழக நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 

அரசியல் களத்தில் முழு மூச்சாக இறங்கு முன் ரஜினிகாந்த் - ஆழம்பார்க்க எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார். அவரது தூத்துக்குடி   விஜயம், அதனைத் தொடர்ந்து அவர் அளித்தபேட்டி, பின்னர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியிலே அவர் ஆத்திரத்தில் வெடித்தது. இவை  எல்லாமே அவரது நிலைகுலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது! ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவரது ‘ஆன்மிகம்’ கேள்விக்குறியாகி  விட்டது.

யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றி பெறுவது சினிமாவில் சாத்யமாகலாம்! ஆனால் அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிப்பிரயோகம் குறித்து தனது டுவிட்டரில், அவர் பதிவு செய்த கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு கருத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதையும், அனைத்துக்கும் போராட்டங்கள் கூடாது என்று தூத்துக்குடியில் பேசும் அவர், வர இருக்கும் தனது படத்தில் அனைத்துக்கும் போராடுவோம் என்கிறார். 

இவையெல்லாம் சுட்டிக் காட்டப்பட்டு சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதும், செயல்படுவதும் தான் ஆன்மிக அரசியலா என்பதை ரஜினிதான் தெளிவாக்க வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பின் போது தன் நிலை மறந்து பதட்டத்தோடு வெடித்துவிட்டு, அதற்கு பலத்த எதிர்ப்பு பல திக்குகளிலிருந்து கிளம்பிய பிறகுவருத்தம் தெரிவித்த ரஜினி, தன் கருத்துக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மறுநாள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

"நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்ன மாதிரி" என்று திரைப்படங்களில் ‘பஞ்ச்’  டைலாக் பேசிய ரஜினி தான், சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தவறாக தன் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டு வெடித்ததற்கு வருத்தம் தெரிவித்ததை வரவேற்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில் விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்ததாகக் கூறிய கருத்து ஏற்கத்தக்கதா? அந்தப் போராட்டத்தில் புகுந்த "விஷக்கிருமிகள், சமூகவிரோதிகளை" தனக்குத் தெரியும் என்று தெரிவித்த ரஜினி, அதனை வெளிப்படுத்தத் தயங்குவதேன்? தனக்குத் தெரிந்த விவகாரத்தையும் தெரிவிக்கத் தவிர்ப்பது தான் ஆன்மீக அரசியலா? ரஜினி விளக்குவார் என எதிர்பார்க்கலாமா?

“எதற்கெடுத்தாலும் போராட்டம்  என்றால் தமிழகம் சுடுகாடாகி விடும்” எனக்கருத்துக் கூறியுள்ளார். அப்படிக் கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா? விரைவில் வர இருக்கும் தனது திரைப்படமான ‘காலா’வில் ‘அனைத்துக்கும் போராடுவோம். புரட்சி உருவாக்கப் போராடுவோம்!’... எனப் பாடி நடித்து விட்டு - நிழலில் ஒன்று, நிஜத்தில் வேறு ஒன்று எனச் செயல்படுவதுதான் ஆன்மிக  அரசியலா? என ரஜினி தெளிவாக்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லப் புறப்பட்டவர், அங்கே சென்றவுடன், பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுக்கு    எதிராகப் பேட்டியளிக்கிறார். மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதி போல தன்னைப் பிரதிபலித்துக் கொள்கிறார். துப்பாக்கிச் சூடு நடைபெற்று பலநாட்களுக்குப் பின் திடீரென விழித்து அங்கே சென்று துப்பாக்கிப் பிரயோகத்துக்கு நியாயம் கற்பிக்கிறார். 

போராட்டத்துக்கு எதிராக விமர்சனங்களை வைத்ததே, அவர் யாராலோ ஏவப்பட்ட அப்படி செயல்படுகிறார். இது ரஜினியின் குரல் அல்ல, அது வேறு யாருடைய குரலாகவோத் தெரிகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசியல் சூட்டின் வேகத்தை ஜெயலலிதா ஆட்சிக்  காலத்தில் அனுபவித்து அடக்கி வாசித்த ரஜினி, அன்று நேரிடையான அரசியல் வாதி அல்ல. ஆனால்  இன்று யாருடைய அச்சுறுத்தலுக்கோ பயந்து அரசியல்களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். எல்லாருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் ‘வில்லனாக’ விமர்சிக்கப்படுகிறார். 

அரசியல் உமிழும் வெப்பங்களைத் தாங்கும் பக்குவத்தை ஏற்றி உடல் உரம் மட்டுமின்றி, உள்ள உரமும் தேவை. ஆன்மிக அரசியல் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்துபோக நேரிடும் என்பதை ரஜினி உணர வேண்டும்.

இவ்வாறு நாளிதழ் கூறப்பட்டு உள்ளது.

Trending News