அரசின் கனவுத் திட்டத்தில் இணைய வரிசை கட்டும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்..!!

இந்தியாவில் தொழில்துறை முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 1, 2020, 06:05 PM IST
  • மொபைல் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றி, இங்கிருந்து ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது.
  • கொரோனா பரவலை தொடர்ந்து, சீனாவின் மீது பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன.
  • 5 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 22 நிறுவனங்கள் முதலீட்டுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் உற்பத்தி செய்ய விண்ணப்பித்துள்ளன
அரசின் கனவுத் திட்டத்தில் இணைய வரிசை கட்டும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்..!! title=

அரசின் கனவுத் திட்டத்தில் இணைய பல மொபைல் உற்பத்தி நிறுவனங்கள்,  மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. 

இந்தியாவில் தொழில்துறை முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம். குறிப்பாக, மொபைல் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றி, இங்கிருந்து ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் முனைப்புக்காட்டி வருகிறது. 

இதற்காகவே தொழில் தொடங்குவதில் எளிமை உட்பட பல்வேறு விதி தளர்வுகளை அறிவித்தது.
உள்நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை Production Link Incentives (PLI) மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த கனவு திட்டத்தில், முதல் கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் ₹11 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல் போன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இலக்கு.

ALSO READ | விற்பனை  சரிந்தாலும் இனி ஏற்றம் தான்... சமூக இடைவெளியை நம்பும் வாகன நிறுவனங்கள்  

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்ய, பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான், ரைசிங் ஸ்டார் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. இவற்றில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள், ஷாமி ஆகிய நிறுவன மாடல்கள் மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. 

இதுதவிர, லாவா, டிக்சான், மைக்ரோமேக்ஸ், பேட்கெட் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களும் சேர்த்து 22 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. உற்பத்தியை பெருக்க தேவையான அளவுக்கு முதலீடு செய்யவும் உறுதி அளித்துள்ளன. ஆனால், லடாக் எல்லை பிரச்னை காரணமாக, ஓப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.

மேற்கண்ட நிறுவனங்கள், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி செய்ய, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் ((Ministry of Electronics and IT)) விண்ணப்பித்துள்ளன. 

இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ₹11.50 லட்சம் மதிப்பிலான மொபைல் போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ₹7 லட்சம் கோடி மதிப்பிலான போன்கள் ஏற்றுமதி செய்யப்படும். இதன்மூலம் நேரடியாக சுமார் 3 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 9 லட்சம் பேரும் என மொத்தம் 12 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (Telecom and IT minister Ravi Shankar Prasad) தெரிவித்துள்ளார்.

ALSO READ |  ஆன்லைனில் வீடு! Rental Housingக்கு 100 % FDI ஐ அரசாங்கம் விரைவில் அனுமதிக்கும்

 கொரோனா பரவலை தொடர்ந்து, சீனாவின் மீது பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக, சீனாவில் உள்ள ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள், உற்பத்தியை சீனாவில் இருந்து இடம் மாற்ற திட்டமிட்டு வருகின்றன. இதன் பலனாக இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் உற்பத்தி அதிகரிக்கும் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், 5 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 22 நிறுவனங்கள் முதலீட்டுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் உற்பத்தி செய்ய விண்ணப்பித்திருப்பது இந்தியாவில் எலக்ட்ரானிக் உற்பத்திக்கான சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

Trending News