BJP அரசாங்கத்தால் எதையும் கட்ட முடியாது; அழிக்க முடியும்: ராகுல் காந்தி!

பா.ஜ.க. அரசால் எதையும் கட்டமைக்க முடியாது; சீர்குலைக்க மட்டுமே முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 4, 2019, 08:50 AM IST
BJP அரசாங்கத்தால் எதையும் கட்ட முடியாது; அழிக்க முடியும்: ராகுல் காந்தி! title=

பா.ஜ.க. அரசால் எதையும் கட்டமைக்க முடியாது; சீர்குலைக்க மட்டுமே முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலில் பாஜக அரசு 2-வது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு தாமாக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ராகுல் காந்தி, அதன் பிறகு அரசியல் கருத்துக்களை வெளியிடாமல் இருந்தர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றதையடுத்து ராகுல் காந்தி சண்டைக் களத்தில் இருந்து ஓடிவிட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார். இந்த சூழ் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், இரும்பு, சிமெண்டு, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் போன்ற தொழில்துறைகளின் வளர்ச்சி இந்த ஆண்டு 0.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருப்பதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த பொருளாதார மந்தநிலை தொடர்பாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘பா.ஜனதா அரசால் எதையும் உருவாக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக ஆர்வத்துடனும், கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்டு இருப்பதை அழிக்க மட்டுமே முடியும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், அவர் இந்திய பொருளாதார மந்த நிலை தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தனது டுவிட்டர் தளத்தில் இணைத்திருந்தார். ரயில்வேயில் இருந்து 3 லட்சம் ஊழியர்ளை பணி நீக்கும் திட்டம், BSNL மற்றும் MTNL-ன் 1 லட்சத்துக்கு 98 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமை, ஆட்டோ மொபைல்ஸ் தொழிலில் பின்னடைவு உள்ளிட்ட நாளிதழ் செய்திகளை பதிவிட்டுள்ள அவர், ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்காதது உள்ளிட்ட செய்திகளை அவர் பகிர்ந்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.

 

Trending News