மகாராஷ்டிராவில் தோல்வியடைந்த பாஜகவின் “ஆபரேஷன் தாமரை”

மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க பாஜக எடுத்த முடிவு தற்கொலைக்கு சமம் என நிரூபணமாகி உள்ளது. பாஜக கட்சியின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 26, 2019, 09:11 PM IST
மகாராஷ்டிராவில் தோல்வியடைந்த பாஜகவின் “ஆபரேஷன் தாமரை” title=

மும்பை: மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான பாதை தெளிவாகி உள்ளது. இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மும்பையில் உள்ள ட்ரைடென்ட் ஹோட்டலில் சந்தித்தனர். இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக உத்தவ் தாக்கரே இருப்பார் என்பது தெளிவாகியுள்ளது. 

உத்தவ் தாக்கரே பதவியேற்பு மூலம், தாக்கரே குடும்பத்தின் பாரம்பரியம் உடைக்கப்படும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். அதாவது சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே தனது குடும்பத்தில் எந்த உறுப்பினரும் நேரடியாக அதிகாரத்தில் பங்கேற்க மாட்டார் என்று கூறியிருந்தார். ஆனால் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக ஒருவர் அரசியல் பதவிக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray)  டிசம்பர் 1 ஆம் தேதி சிவாஜி பூங்காவில் முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மகா விகாஸ் அகாடி (Maha Vikas Aghadi)  என்று அழைக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மஹா விகாஸ் அகாதியின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தின் போது, உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) என்.சி.பி (Nationalist Congress Party) தலைவர் சரத் பவாரை வணங்கி அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

மகாராஷ்டிராவில் பாஜகவின் 'ஆபரேஷன் தாமரை' தோல்வியடைந்தது:-

மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) சேர்ந்த அஜித் பவாரை "கையாள்வதன் மூலம்" ஒரே இரவில் மாநிலத்தில் பாஜக அரசு உருவாக்கப்பட்டது. ஆனால் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் பெரும்பான்மை நிருப்பிக்கும் முன்பே களத்தை விட்டு வெளியேறினர்.

புதன்கிழமை மாலை 5 மணிக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது, ஆனால் அவர் தனது இயலாமையை வெளிப்படுத்தி ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் மூலம் பாஜகவின் "ஆபரேஷன் கமல்" திட்டமும் வெற்றி அடையவில்லை. அதேவேளையில், சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து வருவதாக கூறிய அஜித் பவாரின் கூற்றும் வெற்றி பெற வில்லை என்பதைக் காட்டுகிறது. 

பெரும்பான்மையை நிருப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய பின்னர் தனது ராஜினாமாவை அறிவித்தார். ஃபட்னவிஸுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அஜித் பவார் ராஜினாமா செய்தார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் துணை முதல்வராக அஜித் பவார் 78 மணி நேரமும், முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் 80 மணி நேரமும் மட்டுமே இருக்க முடிந்தது.

அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு பதவியேற்றபோது, ​​அது பாஜகவினரால் "பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்று விளம்பரப்படுத்தப்பட்டது. சமூக ஊடகங்களிலும், பாஜக ஆதரவாளர்கள் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது பாஜகவின் இராஜதந்திரம் என்று பெருமிதம் அடைந்தனர். 

இருப்பினும், சரத் பவார் ட்வீட் செய்து, பாஜகவுக்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவாகும். அது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல எனக் கூறியிருந்தார். அதன் பின்னர் மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை மாறத் தொடங்கின.

முதலில் சரத் பவாரும் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்பதில் தயக்கம் காட்டுகிறார் என்று நம்பப்பட்டது. ஆனால் அவர் சிவசேனா மற்றும் காங்கிரஸுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து, 162 எம்.எல்.ஏ.க்களின் பொது அணிவகுப்பை நேற்று (திங்கள்கிழமை) மாலை 7 மணி முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடத்தியதும், அவர் சிவசேனா மற்றும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறார் என்று உறுதியானது.

கடந்த சனிக்கிழமை அவசர அவசரமாக புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னர், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி எந்த கால அவகாசத்தையும் நிர்ணியக்காததால், இத்தகைய சூழ்நிலையில், அஜித் பவார் பெரும்பான்மைக்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்பாடு செய்வார் அல்லது ஆபரேஷன் லோட்டஸின் கீழ், மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை உடைத்து பெரும்பான்மை நிருப்பிக்கலாம் என்று பாஜக திட்டம் போட்டது. ஆனால் மாமா சரத் பவாரின் அரசியல் நகர்வுகளுக்கு முன்னால், மருமகன் அஜித் பவார் தோற்கடிக்கப்பட்டார் என்பதே உண்மை.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜக அவசரமாக அரசாங்கத்தை அமைத்ததில் ஏற்பட்ட தவறை உணர்ந்திருக்கிறது. இப்படி செய்வதால் பொதுமக்களின் அனுதாபம் நமது கட்சிக்கு கிடைக்கும் என பாஜக நினைத்தது மிகப்பெரிய தவறு எனவும் உணர்ந்துள்ளது. 

அஜித் பவாரின் பேச்சின் மேல் அதிக நம்பிக்கை வைத்ததால் பலியானதாக பாஜக உணர்ந்தது. மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களை நிச்சயமாக அஜீத் பவார் கொண்டு வருவார் என பாஜக நினைத்தது. ஆனால் அஜித் பவாரின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க பாஜக எடுத்த முடிவு தற்கொலைக்கு சமம் என நிரூபணமாகி உள்ளது. பாஜக கட்சியின் நம்பகத்தன்மை மற்றும் மூலோபாயம் இரண்டிலும் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இனிமேல் பாஜக தரப்பு, ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி கையாள வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்திருக்கும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News