இந்தியாவை கனடா குற்றம்சாட்ட இதுதான் காரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்

India Canada Issue: கனேடிய அரசாங்கம் நிஜ்ஜாரின் மரணத்துடன் இந்திய முகவர்களைத் தொடர்புபடுத்தும் ஆதாரங்களை வெளியிடவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2023, 09:59 AM IST
  • காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா கனடா இடையிலான இறுக்கங்கள் அதிகரித்து வருகின்றன.
  • ட்ரூடோவின் கூற்றுகளை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.
  • கனேடிய அரசாங்கம் நிஜ்ஜாரின் மரணத்துடன் இந்திய முகவர்களைத் தொடர்புபடுத்தும் ஆதாரங்களை வெளியிடவில்லை.
இந்தியாவை கனடா குற்றம்சாட்ட இதுதான் காரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்  title=

டொராண்டோ: காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா கனடா இடையிலான இறுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. கனடா உறுப்பினராக உள்ள ‘ஃபைவ் ஐஸ் இண்டலிசன்ஸ் அலையன்ஸ்’ கூட்டமைப்பின் ஒரு உறிப்பினர் நாடு கொடுத்த உளவுத் தகவலும், இந்திய அதிகாரிகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு இடைமறிப்புகளும் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கு இந்திய அதிகாரிகள் காரணம் என ஒட்டாவா குற்றம் சாட்ட காரணமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிப்பதாக சிபிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி, நிஜ்ஜரின் கொலை குறித்த ஒரு மாத கால விசாரணையின் போது, இந்திய அதிகாரிகள், இராஜ்ஜீய முகவர்கள் மற்றும் "ஃபைவ் ஐஸ் உளவுத்துறை கூட்டணியில் உள்ள பெயரிடப்படாத கூட்டாளியால் வழங்கப்பட்ட தகவல்" ஆகியவற்றுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை உள்ளடக்கிய உளவுத்துறை தகவல்களை கனடா சேகரித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கனடாவைத் தவிர, ஃபைவ் ஐஸ் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பானது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இது 1946 இல் உருவாக்கப்பட்டது. நிஜ்ஜாரின் மரணம் குறித்த கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தூதாண்மை அதிகாரிகளை வெளியேற்றுவது, மக்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது என புது டெல்லியும் ஒடாவாவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

ஜூன் 18, 2023 அன்று சர்ரேயில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே நடந்த நிஜ்ஜார் கொலையின் விசாரணையில் ஒத்துழைக்கக் கோரி கனேடிய அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்றதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், கனேடிய தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் ஜோடி தாமஸ் ஆகஸ்ட் நடுப்பகுதியில் நான்கு நாட்களும், இந்த மாதம் ஐந்து நாட்களுக்கும் இந்தியாவில் இருந்தார் என்றும், பின்னர் இந்த மாதம் இரு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையே ஒரு பதட்டமான சந்திப்பும் நடந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பயங்கரவாதிகளுக்கு 'பாதுகாப்பான புகலிடமாக' கனடா மாறி வருகிறது: இந்தியா

கனேடிய அரசாங்கம் நிஜ்ஜாரின் மரணத்துடன் இந்திய முகவர்களைத் தொடர்புபடுத்தும் ஆதாரங்களை வெளியிடவில்லை என்றாலும், இறுதிச் சட்டச் செயல்பாட்டின் போது அது வெளிவரலாம் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புலனாய்வு அறிக்கைகள் பற்றி கேட்கப்பட்டபோது, துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் CBC நியூஸிடம் விசாரணை குழுவின் ஒப்புதல் இல்லாமலும், கனடாவின் ஃபைவ் ஐஸ் பங்காளிகளிடன் கலந்தாலோசிக்காமலும் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

ட்ரூடோவின் கூற்றுகளை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. அவற்றை "ஆதரமற்றவை" என்று கூறிய கனடா காலிஸ்தானி பயங்கரவாதிகளுக்கும் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதாக குற்றம் சாட்டியது. கனேடிய அரசியல் பிரமுகர்கள் "அத்தகைய நபர்களுக்கு" வெளிப்படையாக தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்துவதில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்தியா கூறியுள்ளது. அதன் மண்ணில் செயல்படும் அனைத்து இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக் கொண்டது.

"நாங்கள் சட்டத்தின் ஆட்சியில் வலுவான அர்ப்பணிப்பு கொண்ட ஒரு ஜனநாயக ஆட்சியாக உள்ளோம். இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், கனடாவில் அடைக்கலம் அளித்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து கவனத்தை திசை திருப்ப முயல்கின்றன. இந்த விவகாரத்தில் கனேடிய அரசாங்கத்தின் செயல் நீண்டகால மற்றும் தொடர்ச்சியான கவலையாக இருந்து வருகிறது" என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

மேலும் படிக்க | கனேடியர்களுக்கு விசா சேவை நிறுத்தம்: செக் வைத்த இந்தியா... அதிகரிக்கும் தீவிரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News