Make in Kashmir: இந்தியாவின் ‘பென்சில் மாவட்டமாக’ முடிசூடவுள்ளது காஷ்மீரின் புல்வாமா!!

பயங்கரவாதத்திற்கு பெயர் வாங்கிய காஷ்மீர் இனி பென்சில்களால் பிரசித்தி பெறப்போகிறது. துப்பாக்கிகளின் சத்தங்கள் கேட்ட காஷ்மீரில் இனி தொழிற்சாலைகளின் சத்தங்கள் கேட்கப்போகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2020, 08:24 PM IST
  • புல்வாமா விரைவில் இந்தியாவின் ‘பென்சில் மாவட்டம்’ என்று அழைக்கப்படக்கூடும்.
  • ஓகூ கிராமம் இந்தியாவில் பென்சில்கள் தயாரிப்பிற்கான 90 சதவீத மரங்களை வழங்குகிறது.
  • பயங்கரவாதத்திற்கு பெயர் வாங்கிய காஷ்மீர் இனி பென்சில்களால் பிரசித்தி பெறப்போகிறது.
Make in Kashmir: இந்தியாவின் ‘பென்சில் மாவட்டமாக’ முடிசூடவுள்ளது காஷ்மீரின் புல்வாமா!! title=

 

நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் பென்சில்களை பலமுறை பயன்படுத்துகிறோம். இனி, ஒவ்வொரு முறை பென்சிலைப் பயன்படுத்தும் போதும் இந்தியாவின் சொர்க்க பூமி காஷ்மீரை (Kashmir) நினைத்துக்கொள்வோம், காஷ்மீர் மக்களை நினைத்துக்கொள்வோம். ஏன்? அதற்கான காரணத்தை இங்கே காணலாம்.

ஜம்மு ஜாஷ்மீரின் புல்வாமா (Pulwama) மாவட்டத்தைப் பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருகிறோம். வன்முறை, சண்டைகள், தாக்குதல்கள் என இப்படிப்பட்ட விஷயங்களுக்கு பிரசித்தி பெற்ற இடம் புல்வாமா. ஆனால், புல்வாமாவிற்கு மற்றொரு முகியத்துவமும் உள்ளது. அது ஒரு ஆக்கப்பூர்வமான முக்கியத்துவம். ஆம். புல்வாமா விரைவில் இந்தியாவின் ‘பென்சில் மாவட்டம்’ (Pencil District) என்று அழைக்கப்படக்கூடும்.

தெற்கு காஷ்மீரில் உள்ள ஓகூ கிராமம் (Oukhoo Village) இந்தியாவில் பென்சில்கள் தயாரிப்பிற்கான 90 சதவீத மரங்களை வழங்குகிறது.

ALSO READ: அடுத்த 2-3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலை வாய்ப்புகள்

இந்த கிராமம் பென்சில் ஸ்லேட்டுகளின் மையமாக உள்ளது. அங்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் மூல மரத்தை பதப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்.

பென்சில் தயாரிக்கத் தேவையான பெரும்பாலான ஸ்லேட்டுகளை வழங்குவதால் இந்த மாவட்டம் விரைவில் இந்தியாவின் (India) பென்சில் மாவட்டம் என்று அழைக்கப்படும் என்பது பலருக்குத் தெரியாது.

"நிறுவனங்கள் ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து பொருட்களைப் பெற்றுக்கொண்டிருந்தன. ஆனால் காலப்போக்கில் அவை அதற்கான மரத்துண்டுகளை சேகரிக்கத் தொடங்கின. பின்னர் நாங்கள் இயந்திரங்களை வாங்கி தகடுகளை இங்கு வடிவமைத்தோம். இதன் மூலம் இங்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று தொழிற்சாலை உரிமையாளர்களில் ஒருவரான மன்சூர் அகமது கூறுகிறார்.

90 களுக்கு முன்னர் இந்தியாவில் நிறுவனங்கள் ஜெர்மனி, சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து விறகுகளை இறக்குமதி செய்தன. தற்போது அவை இங்கேயே பெறப்படுவதால், இது உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் உதவியுள்ளது.

சரியான அளவு ஈரப்பதம் இருப்பதால் மாவட்டத்தின் ஈரநிலங்களில் வளரும் சிறப்பம்சம் வாய்ந்த மரங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இங்கு சுமார் 17 பதிவு செய்யப்பட்ட அலகுகள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன.

"அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவை வெற்றிகரமாகவும் இருந்துள்ளன. புல்வாமா 'பென்சில் மாவட்டம்' என்று எதிர்காலத்தில் அழைக்கப்படுவதற்கான ஒரு திட்டமும் உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு வீடும் இங்கு மர தகடுகளை (Wooden Slates) உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று மற்றொருவர் தொழிற்சாலை உரிமையாளர் முபாஷீர் கூறுகிறார்.

தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு மர தகடுகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அவற்றை பென்சில்களாக்கும். அடுத்த கட்டமாக, காஷ்மீரிலேயே முழு பென்சிலையும் தயாரிப்பதற்கான கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.

பயங்கரவாதத்திற்கு பெயர் வாங்கிய காஷ்மீர் இனி பென்சில்களால் பிரசித்தி பெறப்போகிறது.

துப்பாக்கிகளின் சத்தங்கள் கேட்ட காஷ்மீரில் இனி தொழிற்சாலைகளின் சத்தங்கள் கேட்கப்போகின்றன.

வன்முறையால் துயரப்பட்ட மக்கள் இனி உழைப்பால் உயரப் போகிறார்கள்!!

ALSO READ: ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News