2 சிறுமிகளுக்கு பள்ளி கழிவறையில் நேர்ந்த கொடுமை... அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - அதிர்ச்சி சம்பவம்!

Maharastra Kids Sexual Assualt: மகாராஷ்டிராவில் நான்கு வயதான இரண்டு சிறுமிகளுக்கு 23 வயதான இளைஞர் பாலியன் வன்கொடுமைக்கு உள்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 20, 2024, 06:04 PM IST
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
  • பத்லாபூர் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
  • போலீசார் மீது போராட்டக்காரர்களும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
2 சிறுமிகளுக்கு பள்ளி கழிவறையில் நேர்ந்த கொடுமை... அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - அதிர்ச்சி சம்பவம்! title=

Maharastra Kids Sexual Assualt: கொல்கத்தாவில் பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல்  வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற குரல்களையும் வலுப்படுத்தியது. 

மருத்துவர்கள் மட்டுமின்றி அரசியல் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் இதுகுறித்த தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் தானே நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

கவனத்தை ஈர்த்த மக்கள் போராட்டம்

மகாராஷ்டிராவின் பள்ளியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவர், நான்கு வயதான இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி பத்லாபூர் ரயில் நிலையத்தில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | கிருஷ்ணகிரி பாலியல் துன்புறுத்தல்; 11 பேர் கைது - கலெக்டர் கொடுத்த விளக்கம்

போராட்டக்காரர்களும் போலீசாரை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது, தொடர்ந்து போராட்டக்காரர்களை தண்டவாளத்தில் இருந்து அகற்ற அங்கிருந்த போலீசார் தடியடியில் ஈடுபட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், பத்லாபூர் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. ஒட்டுமொத்த நாட்டையே இப்போது இந்த மக்கள் போராட்டம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மும்பை - தானே மின்சார ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த அரசு தரப்பு முயற்சித்து வருகிறது. 

சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை

சம்பவம் நடந்த பள்ளியில், நான்கு வயதான இரண்டு சிறுமிகளும், பெண்கள் கழிவறைக்கு சென்றுள்ளனர். அந்த பெண்கள் கழிவறையை சுத்தம் செய்து வந்த தூய்மை பணியாளரான 23 வயது இளைஞர்தான், இந்த இரண்டு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியுள்ளார் என குற்றஞ்சாட்டப்படுகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆக. 12ஆம் தேதியில் இருந்து ஆக. 15ஆம் தேதிக்குள் நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருபாலர் பயிலும் பள்ளி என்ற நிலையில், பெண்கள் கழிவறையை சுத்தம் செய்ய பெண் பணியாளர்களை நியமிக்காதது பள்ளி மீது கடுமையான விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது. காலை வகுப்பின் போது இரு சிறுமிகளும் கழிவறைக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றஞ்சுமத்தப்பட்ட அந்த 23 வயது இளைஞர் ஒப்பந்த பணியாளராக கடந்த ஆக. 1ஆம் தேதிதான் நியமிக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் பிறப்புறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. மேலும், தான் கழிவறைக்கு சென்றிருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இளைஞர் தனது பிறப்புறுப்பை தொட்டதாகவும் கூறியுள்ளார். உடனடியாக, அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றொரு சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த இரண்டு சிறுமிகளும் பள்ளியில் நெருங்கிய தோழிகளாவர். 

அந்த சிறுமியும் பள்ளிக்குச் செல்வதே தற்போது அச்சமாக இருப்பதாக தெரிவித்தாகவும் பெற்றோர் கவலைத் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, கடந்த ஆக. 16ஆம் தேதி பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமிகள் இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது மருத்துவ ரீதியில் உறுதியானது. 

பள்ளி மீதும் அதிருப்தி

போலீசார் இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பள்ளி நிர்வாகம் இந்த சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. பெண் ஊழியர்கள் இல்லாதது மட்டுமின்றி பள்ளியில் சம்பவ இடத்தின் அருகே மட்டுமின்றி, பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்தாதது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. 

உடனடியாக பள்ளி நிர்வாகம் இதில் தலையிட்டு பள்ளி முதல்வர், அந்த சிறுமிகளின் வகுப்பு ஆசிரியர், பெண் பணியாளர் ஒருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இருப்பினும், குழந்தைகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் முழுமையாக பொறுப்பேற்கவில்லை என்றும், குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக மன்னிப்போ அல்லது உறுதிமொழியோ பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து வரவே இல்லை என்றும் பல பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். 

முதல்வர் விளக்கம்

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இதுகுறித்து,"பத்லாபூரில் நடந்த சம்பவத்தை நான் தீவிரமாக கவனித்தேன். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் யாரும் சட்டத்திடம் இருந்து தப்பிக்க இயலாது" என குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிசெய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

மேலும் படிக்க | 150 கிராம் விந்தணு உடலில் இருந்ததா? கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு - வெளியான பரபர தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News