சர்வதேச மகளிர் தினம்: வைரலாகும் வைரமுத்து கவிதை!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவிகர் வைரமுத்து மகளிரை பற்றி கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார். 

Last Updated : Mar 8, 2018, 02:01 PM IST
சர்வதேச மகளிர் தினம்: வைரலாகும் வைரமுத்து கவிதை! title=
மகளிர் தினமான இன்று கவிகர் வைரமுத்து கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
வைரமுத்தின் ட்விட்டர் பதிவு.......!
 
மதிக்கப்படுதல் – புரியப்படுதல் 
 
நேசிக்கப்படுதல் – உரிமை பெறுதல்
 
என்ற நான்கைத்தான் ஒரு பெண் 
 
பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
 
 
இந்த நான்கும் பெற்றால் ஒரு பெண்ணுக்குமார்ச் 8 மட்டுமன்று,மாதமெல்லாம் மகளிர் தினம்தான்.என பதிவிட்டிருந்தார். அம்மாவில்  இருந்து தானே அத்தனை ஜீவனும் ஆரம்பமாகிறது. பெண்ணின் பெருமைக்கு  ஈடு சொல்ல தாய்மையை விட உயர்வேது. தனது அம்மாவுக்கு, கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதையை சர்வதேச மகளிர் தினத்தில் உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறோம். 
 
இதோ அந்த கவிதை உங்களுக்காக...!
 
*ஆயிரந்தான் கவிசொன்னேன்
 
அழகழகாப் பொய் சொன்னேன்
 
 
*பெத்தவளே ஒம்பெரும
 
ஒத்தவரி சொல்லலியே!
 
காத்தெல்லாம் மகன்பாட்டு
 
காயிதத்தில் அவன் எழுத்து
 
 
*ஊரெல்லாம் மகன் பேச்சு
 
ஓங்கீர்த்தி எழுதலையே!
 
எழுதவோ படிக்கவோ
 
ஏலாத தாய்பத்தி
 
எழுதிஎன்ன லாபமின்னு
 
எழுதாமப் போனேனோ?
 
 
*பொன்னையாத் தேவன்
 
பெத்த பொன்னே! குலமகளே!
 
என்னைப் புறந்தள்ள
 
இடுப்புவலி பொறுத்தவளே!
 
வைரமுத்து பிறப்பான்னு
 
வயித்தில்நீ சுமந்ததில்ல
 
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
 
வைரமுத்து ஆயிருச்சு
 
 
*கண்ணுகாது மூக்கோட
 
கறுப்பா ஒருபிண்டம்
 
இடப்பக்கம் கெடக்கையில
 
என்னென்ன நெனச்சிருப்ப?
 
 
*கத்தி எடுப்பவனோ?
 
களவாடப் பிறந்தவனோ?
 
தரணிஆள வந்திருக்கும்
 
தாசில்தார் இவந்தானோ?
 
 
*இந்த வெவரங்க
 
ஏதொண்ணும் அறியாம
 
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
 
நெனச்சா அழுகவரும்
 
 
*கதகதன்னு களி(க்) கிண்டி
 
களிக்குள்ள குழிவெட்டி
 
கருப்பட்டி நல்லெண்ண
 
கலந்து தருவாயே
 
தொண்டையில் அதுஎறங்கும்
 
சொகமான எளஞ்சூடு
 
மண்டையில இன்னும்
 
மசமன்னு நிக்கிதம்மா
 
 
*கொத்தமல்லி வறுத்துவச்சுக்
 
குறுமொளகா ரெண்டுவச்சு
 
சீரகமும் சிறுமொளகும்
 
சேத்துவச்சு நீர்தெளிச்சு
 
 
*கும்மி அரச்சு நீ
 
கொழகொழன்னு வழிக்கையிலே
 
அம்மி மணக்கும்
 
அடுத்ததெரு மணமணக்கும்
 
 
*தித்திக்கச் சமச்சாலும்
 
திட்டிக்கிட்டே சமச்சாலும்
 
கத்திரிக்கா நெய்வடியும்
 
கருவாடு தேனொழுகும்
 
 
*கோழிக் கொழம்புமேல
 
குட்டிக்குட்டியா மெதக்கும்
 
தேங்காச் சில்லுக்கு
 
தேகமெல்லாம் எச்சிஊறும்
 
வறுமையில நாமபட்ட
 
வலிதாங்க மாட்டாம
 
பேனா எடுத்தேன்
 
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
 
 
*பாசமுள்ள வேளையில
 
காசுபணம் கூடலையே!
 
காசுவந்த வேளையிலே
 
பாசம்வந்து சேரலையே!
 
 
*கல்யாணம்  நான் செஞ்சு
 
கதியத்து நிக்கையிலே
 
பெத்தஅப்பன் சென்னைவந்து
 
சொத்தெழுதிப் போனபின்னே
 
 
*அஞ்சாறு  வருசம்உன்
 
ஆசமொகம் பாக்காமப்
 
பிள்ளைமனம் பித்தாச்சே
 
பெத்தமனம் கல்லாச்சே
 
 
*படிப்புப் படிச்சுக்கிட்டே
 
பணம் அனுப்பி வச்சமகன்
 
கைவிட மாட்டான்னு
 
கடைசியில நம்பலையே!
 
பாசம் கண்ணீரு
 
பழையகதை எல்லாமே
 
வெறிச்சோடி போன
 
வேதாந்த மாயிருச்சே!
 
 
*வைகையில ஊர்முழுக
 
வல்லூறும் சேர்ந்தழுக
 
கைப்பிடியாக் கூட்டிவந்து
 
கரைசேத்து விட்டவளே!
 
 
*எனக்கொண்ணு ஆனதுன்னா
 
ஒனக்குவேற பிள்ளையுண்டு
 
ஒனக்கேதும் ஆனதுன்னா
 
எனக்குவேற தாயிருக்கா?
 
இந்த நாள், பெண்கள் பல சாதனைகள் படைத்திட வித்திடும் நன்நாளாக அமைய ZEENEWS தமிழ்-ன் வாழ்த்துக்கள்.

Trending News