தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவம்..! கொதித்தெழுந்த சினிமா பிரபலங்கள்..!

Celebrites About Nanguneri Issue: நாங்குநேரியில் சாதியை காரணமாக வைத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனை உடன் படித்தவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 12, 2023, 11:35 AM IST
  • நாங்குநேரியில் பள்ளி மாணவரை வீடு புகுந்து வெட்டியுள்ளனர்.
  • சாதிய கொடுமைகள் சிறார்கள் இடையே நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இதற்கு சினிமா பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவம்..! கொதித்தெழுந்த சினிமா பிரபலங்கள்..!  title=

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெருந்தருவில் வீட்டிற்குள் புகுந்து
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல்  அரிவாளால் வெட்டியது. அதனை தடுக்க வந்த அவரது சகோதரி சந்திர செல்வி என்பவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதைப்பார்த்த அவரது தாத்தாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். 

மாணவனுக்கு அரிவாள் வெட்டு:

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியின் அருகே உள்ள பெருந்தெருவில் வசித்த வந்தவர், சின்னதுரை. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது சகோதரி சந்திர செல்வி மற்றும் தாத்தா கிருஷ்ணன் ஆகியோருடன் தங்கி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் அடையாளம் தெரியாத 6 பேர் இவர் வீட்டிற்குள் புகுந்து சின்னதுரையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுக்க சென்ற மாணவனின் தங்கை சந்திர செல்விக்கும் வெட்டு விழுந்துள்ளது. இவர்கள் பாளையங்கோட்டை ஐக்ரவுண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அரிவாளால் வெட்டு வாங்கியதை நேரில் பார்த்த தாத்தா கிருஷ்ணன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில தொடர்புடைய 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாதிய கொடுமை:

மாணவன் சின்னதுரையை அவரது சாதியை வைத்து சக மாணவர்கள் இழிவு படுத்தியதாக பேசப்படுகிறது. இதனால், சின்னதுரையின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து புகாரளித்துள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கும் நோக்கில் அன்று இரவு சின்னதுரையின் வீட்டிற்குள் நுழைந்த அந்த 6 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் மாணவனையும் அவரது சகோதரியையும் வெட்டியுள்ளனர். இவை, போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | ரஜினி பட தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை..! அதிர்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள்..!

ஜி.வி.பிரகாஷ் குமார்:

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், “சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்..” என நேற்று ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். 

GV

அடிப்பட்ட மாணவன் விரைவில் குணமடைய தான் வேண்டிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

மாரி செல்வராஜ்:

‘மாமன்னன்’ இயக்குநர் மாரி செல்வராஜ் நாங்குநேரி பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசயுள்ளார். அதில், “இந்த மாணவனின் கதையை சீக்கிரமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..” என்று உருக்கமாக எழுதியுள்ளார். 

Mari Selvaraj

“கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

பா.ரஞ்சித்:

தமிழ் சினிமாவின் புரட்சி மிகு இயக்குநர்களுள் ஒருவராக பார்க்கப்படுபவர் பா. ரஞ்சித். இவர், “சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்” என ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

இதில் அவர் சாதியை வைத்து நடக்கும் அரசியலை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அடுத்த தலைமுறையையும் விழுங்கவிருக்கும் சாதியினை ஒழிக்க ஒன்றினைவோம் என்றும் கூறியிருக்கிறார். 

சந்தோஷ் நாராயணன்:

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் ட்விட்டர் பக்கத்தில் நாங்குநேரி சம்பவம் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் அந்த சம்பவம் குறித்த வரையப்பட்ட ஒரு ஓவியத்தையும் இணைத்துள்ளார். 

சந்தோஷ் நாராயணன், “சாதி ஒரு அழகிய சொல்! குடி பெருமை பேசி திரியும் சாதி வெறியர்கள் பார்வைக்கு…” என்று கூறியிருக்கிறார். 

அரந்தாங்கி நிஷா:

தொலைக்காட்சி பிரபலமான அரந்தாங்கி நிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “படிச்சா நீ ஒரு படி உயரலாம்னு எப்பவுமே சொல்லுவாங்க, ஆனா நீ படிச்சதுக்கு உன் வீட்டு படி முழுக்க ரத்தம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

அவர், அந்த பதிவில், “ பாரதி இப்ப இல்லன்னு சந்தோஷப்படுகிறேன் சின்ன பிள்ளைங்க தானே பண்ணுனாங்கன்னு சாதாரணமாக விட கூடாது கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | பிரபல நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை-5 ஆயிரம் ரூபாய் அபராதம்! என்ன காரணம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News