இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்வது அமித் ஷா முடிவுதான் - விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து‍!

பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு குறைவுதான் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 20, 2022, 03:29 PM IST
  • பாகிஸ்தானுக்கு இந்தியா போகாது - ஜெய் ஷா
  • அடுத்தாண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
  • இந்தியா கடைசியாக 2005-06ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்வது அமித் ஷா முடிவுதான் - விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து‍! title=

டி20 உலகக்கோபை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, அக். 23ஆம் தேதி நடைபெறும், சூப்பர் 12 சுற்றுப்போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்த போட்டியை காண ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் சூழலில், இந்தியா - பாகிஸ்தான் மற்றொரு சர்ச்சை ஒன்று நிலவிவருகிறது. அதாவது அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆசியக்கோப்பை தொடரை முன்னிட்டு இந்த சர்ச்சை கிளம்பியது.

கடந்த செவ்வாய்கிழமை அன்று (அக். 18) நடைபெற்ற பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில், பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா கூறிய கருத்துகள் இந்த சர்ச்சையின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. ஆசியக்கோப்பை தொடர், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்றால், அதில் இந்திய அணி பங்கேற்காது என அவர் கூறியிருந்தார். பாகிஸ்தான் இல்லாமல், இருவருக்கும் பொதுவான ஒரு நாட்டில் தொடர் நடைபெற்றால், அதில் இந்தியா பங்கேற்கும் எனவும் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | இந்தியா பாகிஸ்தான் உலகக்கோப்பை டி20 போட்டி கைவிடப்பட்டதா?

இதற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,"ஜெய் ஷாவின் கருத்துகள் ஒற்றைத்தன்மையாக உள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் சமூகத்தை பிரிக்கும் வகையில் உள்ளது. ஆசியக்கோப்பையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை தொடரிலும் (50 ஓவர்) சில தாக்கங்கள் ஏற்படும்.

இதனால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கலாம். 2024 - 2031ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ஐசிசி தொடர்களிலும் இது எதிரொலிக்கும்" என குறிப்பிட்டுள்ளது. சமீபத்தில், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டன. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"50 ஓவர் உலக்கோப்பை தொடர் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து பெரிய பெரிய அணிகள் அதில் பங்கேற்க இந்தியா வர உள்ளன. 

எந்த விளையாட்டிலும் நீங்கள் இந்தியாவை புறக்கணிக்க முடியாது. விளையாட்டிற்கு இந்தியா நிறைய பங்களித்துள்ளது, குறிப்பாக கிரிக்கெட்டிற்கு. இந்தியா இல்லாத கிரிக்கெட் எப்படி இருக்கும்?" என்றார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர்,"எல்லாவற்றுக்கும் சாத்தியக்கூறுகள் எப்போதும் இருக்கும். கரோனா என்ற ஒன்று வரும் என நாம் எதிர்பார்த்தோமா?. எதுவேண்டுமானாலும், நடக்கலாம், இந்தியா பாகிஸ்தானுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான். இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவு. ஒட்டுமொத்தமாக, வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியமானது" என்றார். 

பாகிஸ்தானுக்கு இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில், 2005-06ஆம் ஆண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மேலும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் 2012-13க்கு பிறகு இருநாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும்தான் மோதிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  மீண்டும் வீடியோ வெளியிட்டு ரிஷப் பந்தை வம்பிழுத்த ஊர்வசி! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News