காற்று மாசு: டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம்!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த E-Commerce மற்றும் Delivery நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 5, 2022, 12:32 PM IST
  • டெலிவரி நிறுவனங்கள் போக்குவரத்தை மின் வாகன பயன்பாட்டிற்கு மாற்றலாம்
  • காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த
காற்று மாசு: டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம்! title=

சஸ்டைனபிள் மொபிலிட்டி நெட்வொர்க் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட சி.எம்.எஸ்.ஆர் எனும் ஆலோசனைக் குழு அண்மையில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இக்கணக்கெடுப்பின் முடிவானது காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் என்கின்ற கோரிக்கை சென்னை மக்களிடம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

மேலும் மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் சேர்ந்த 9048 வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கேட்பில் சென்னையில் மட்டும் 1508 நபர்களிடம் விநியோக நிறுவனங்களின் மின்வாகன மாற்றுத் திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. 

ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

1. டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 78% நுகர்வோர் கடைசி மைல் டெலிவரி வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன என்பதை உணர்ந்துள்ளார்கள்.

2. சென்னை, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூர் முழுவதும் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் பார்சல் டெலிவரி சேவைகள் சார்ந்த 9048 நுகர்வோரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

3. சென்னையில் உள்ள 86% நுகர்வோர்கள் கடைசி மைல் டெலிவரியில் ஒரு பெரிய நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவது, பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என நம்புகிறார்கள்.

மேலும் படிக்க | கிராமங்களுக்குள் படையெடுக்கும் ஈ கூட்டம்.! தொற்று பரவும் அச்சத்தில் மக்கள்

4. சென்னையில் உள்ள 89% நுகர்வோர் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களுக்கு காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது "மிகவும் முக்கியமானது" என நம்புகிறார்கள்.

5. 80% சென்னையில் உள்ள நுகர்வோர் கடைசி மைல் டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிப்பதாக உணர்கிறார்கள்.

6. சென்னையில் உள்ள 8% நுகர்வோர் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி டெலிவரி எடுக்க முயற்சிகள் செய்வதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

7. சென்னையில் உள்ள 70% டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார்கள்.

8. 78% டெல்லிவாசிகள், டெல்லி அரசு தனது வரைவு ஒப்பந்தத்தில் டெலிவரி நிறுவனங்களுக்கு நிர்ணயித்த இலக்குகளை அடைவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.

9. 65% மும்பை மக்களும் 78% புனே மக்ககளும், மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அதன் மின்வாகன கொள்கையில் டெலிவரி நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.

10. 64% நுகர்வோர், டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை மின்சார வாகனங்களுக்கு மாற்றும் செயலில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார்கள். 

11. 12% நுகர்வோர் மட்டுமே விநியோக நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி பொருட்கள் விநியோகிக்கும் முயற்சிகள் செய்வதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

12. 93% நுகர்வோர் கடைசி மைல் டெலிவரியில் ஒரு பெரிய நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவதால், பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என நம்புகிறார்கள்.

13. டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 67% நுகர்வோர்கள் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது "மிகவும் முக்கியமானது" என நம்புகிறார்கள்.

மின் வர்த்தகம், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் மற்றும் பிற விநியோக முறைகள் முதலியவை இந்தியாவில் அதிவிரைவாக வளர்ந்து வரும் பிரிவுகள் என்கிறார் CMSR-இன் ஆலோசனைக் குழுவின் இயக்குனர் கஜேந்திர ராய். ”சென்னையைப் போன்ற வளர்ந்த நகரங்கள் இத்தகைய நிறுவனங்களுக்கான பிரதான சந்தை இடங்களாக விளங்குவதால் சென்னை முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களிடம் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகளைக் கொண்டு விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்தான அவர்களின் கருத்துகள் இந்த ஆய்வில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கணக்கெடுப்பில் பங்குபெற்ற பெரும்பாலானவர்கள் (94%) 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். ஏனென்றால் இந்நிறுவனங்களின் பிரதான வாடிக்கையாளர்கள் அவர்களே” என்றும் அவர் கூறினார். 

இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 80% சென்னையின் அதிக்கப்படியான காற்று மாசிற்கு முதன்மையாக குறிப்பிட்ட காரணங்களில் ஒன்று last mile delivery. மேலும் 89% நபர்கள் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசை எதிர்கொள்வதற்கு இந்நிறுவனங்கள் மின்வாகனங்களுக்கு மாறுவதையே முக்கியத் தீர்வாய் பரிந்துரைத்துள்ளார்கள். இதற்கேற்றபடியாக, சென்னையின் மொத்த கார்பன் உமிழ்வில் 50% போக்குவரத்துத் துறையிலிருந்து வருவதாக இந்திய அரசாங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இதில் குறைந்தபட்சம் 40,000 டன் அளவிற்கான கார்பன் வெளியேற்றம் விநியோக நிறுவனங்களின் கடைக்கோடி விநியோக வாகனப் பயன்பாட்டால் விளைந்தது எனவும் குறிப்பிடுகின்றன. மேலும் இந்த நிறுவனங்கள் தங்கள் விநியோக ஊழியர்களுக்கு மின்வாகனங்கள் வாங்வதற்கான தொகையை தவணையாகவோ அல்லது சொந்தமாக வாகனம் வாங்கியோ கொடுக்க வேண்டும் என்று 38% மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 31% பங்கேற்பாளர்கள் தங்களது ஊழியர்கள் மின்வாகனங்களுக்கு மாற அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டுமென்றும் 19% மக்கள் ஊழியர்கள் தற்போது பயன்படுத்தும் வாகனங்களை மறுசீரமைக்க உதவி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர். 

”நாம் அனைவரும் காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம் என்கிற உண்மையை இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது. கார்பன் உமிழ்வற்ற வாகனங்களை நோக்கி இப்பெருநிறுவனங்கள் நகர்வது, இன்றைய நெருக்கடியான நகரச் சூழலில் குறிப்பிடத்தக்க அளவு சுத்தமான காற்றைப் பெற வழிவகுக்கும். மேலும் கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைத்து அதே நேரத்தில் உரிய மாற்று வழிகளை ஆதரித்தால் இத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நியாயம் சேர்ப்பதாக அமையும்” என்கிறார் சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு 

இந்த ஆய்வானது பெருமளவில் (92%) நேரடியாக மக்களை பேட்டிகண்டு நடத்தப்பட்டதன் விளைவாகப் புலனாகும் மற்றுமொரு உண்மை என்னவென்றால் ஏதேனும் ஒரு நிறுவனத்திடமிருந்து வரும் முன்மாதிரியான மாற்றம் மற்ற நிறுவனங்களையும் ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் இத்துறையில் கணிசமான அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை 86% மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த ஆய்வில் அமேசான், ஃப்லிப்கார்ட், ஸ்விகி, சோமாட்டோ போன்ற அதிக பயன்பாட்டில் உள்ள நிறுவனங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. இவற்றோடு பிக் பாஸ்கெட், டன்சோ, ப்ளின்கிட்/க்ரோபர்ஸ், ஜீயோ மார்ட், மில்க் பாஸ்கெட், ப்ளூ டார்ட், பெடெக்ஸ், காடி முதலிய மற்ற சிறு நிறுவனங்களும் இதில் அடக்கம். 

இதுகுறித்து அதுல் முதலியார், காலநிலை குழுவில் வணிக முயற்சிகளின் தலைவர் கூறுகையில் அனைத்து இணைய வர்த்தகம் மற்றும் உணவு நிறுவனங்கள் பொருட்களை விநியோகிக்க மாசற்ற வழிமுறைகளை பின்பற்றத் தொடங்க வேண்டும், மூன்றில் இரண்டு வாடிக்கையாளர்கள் தான் வாங்கும் பொருட்களின் விளைவாக ஏற்படும் காற்று மாசிற்கு தான் பொறுப்பிற்குள்ளானவர் என்பதை உணர்ந்தேயிருகிறார்கள் என்பதை இந்த கணக்கெடுப்பு உணர்த்துகிறது. நிறுவனங்கள் மின்வாகனப் பயன்பாட்டிற்கு மாறுவதன் வழியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். இத்தருணத்தில் சோமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் 2030-குள் முற்றிலுமாக மின்வாகனவழி விநியோகத்திற்கு மாறும் என அறிவித்துள்ளன. அதே நேரத்தில் அரசு இவை பின்பற்ற வேண்டிய கண்டிப்பான கொள்கைகளை வரையறை செய்துள்ளது. இதனால் விநியோக நிறுவனங்கள் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தங்களது பிராண்ட் மீது பற்றுகொண்ட ஒரு சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு செவி சாய்ப்பார்கள். ஆனால், நம்மிடம் இருக்கும் ஒரே கேள்வி அதை எவ்வளவு விரைவில் எப்படி சாத்தியப்படுத்தப் போகிறார்கள் என்பதே. வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது இந்த கணக்கெடுப்பின் மூலம் தெளிவாக நமக்குத் தெரிய வந்துள்ளது” என்றார். 

இக்கணக்கெடுப்பில் தெரியவரும் மற்றுமொரு தகவல் என்னவென்றால் மும்பை, புனே, டெல்லி போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் அம்மாநிலங்களில் தற்சமயம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மற்றும் முன்மொழியப்பட்டிருக்கும் திட்டங்களை வரவேற்பதுடன் மட்டுமில்லாமல் அவற்றினைப் பின்பற்றி கார்பன் உமிழ்வை குறைக்கும் உத்திரவாதம் அளிக்கும் நிறுவனங்களுடன் மட்டுமே பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள். மஹாராஷ்டிரா மாநிலம் தனது மின் வாகன திட்டத்தின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டிற்குள் விநியோக நிறுவனங்கள் மின்வாகனப் பயன்பாட்டிற்கு மாறுவதை 25 சதவீதம் அதிகரிப்பதைத் தனக்கான இலக்காக நிர்ணயித்துள்ளது. அதே சமயத்தில் 2022 ஜனவரி மாதம் வெளியான டெல்லி வரைவு மோட்டார் திட்டம் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2022 ஜூலையில் வெளியான அதன் இறுதி வரைவில் 2030 ஏப்ரலில் விநியோக நிறுவனங்கள் மினாவன வழி போக்குவரத்தை 100% எட்டும் என அறிவித்துள்ளது. 

இந்த ஆய்வின் முடிவுகள் மாநில அளவில் கண்டிப்பான திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான ஆதரவு எத்தனை அவசியமானது என்பதை நமக்கு உணர்த்துகின்றது. மஹாராஷ்ட்ரா மற்றும் டெல்லி இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. தமிழ்நாடு அரசு, மஹாராஷ்ட்ரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு இணைய- வர்த்தகம் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை முற்றிலுமாக மின்வாகனப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தை தமிழ் நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் கூறினார். 

தமிழ்நாடு அரசின் மின்வாகனத் திட்டங்கள் மின்சார வாகன உற்பத்திக்கானச் சூழலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது என்றாலும் அதே நேரத்தில் அவை பயன்பாட்டிற்கு வரத்தேவையான சூழலையும் மாற்றத்தை நோக்கிய நகர்வையும் குறிப்பாக இணைய வர்த்தகத் துறையின் விற்பனை மற்றும் விநியோகப் பிரிவில் உருவாக்குவதிலும் கவனம் செல்லுத்துவது அவசியமானது என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | Environmental Disaster: 750 டன் டீசலுடன் கவிழ்ந்த கப்பல் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பேரழிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News