கர்நாடக அரசு நடவடிக்கை கண்டிக்கத்தக்கது - முக ஸ்டாலின் சாடல்!

காவிரி குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 24, 2019, 05:21 PM IST
கர்நாடக அரசு நடவடிக்கை கண்டிக்கத்தக்கது - முக ஸ்டாலின் சாடல்! title=

காவிரி குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலருக்கு இதுதொடர்பாக கர்நாடக காவிரி நீர்ப்பாசன கழகத் தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேகதாது அணை குறித்த விவரங்களை தெரிவித்திருப்பதுடன், அவற்றின் அடிப்படையில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், மேகதாது அணை குறித்து ஏற்கனவே வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழகத்திற்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றன.

மேகதாது அணையின் திட்ட மதிப்பு ரூ.5912 என்று அதன் வரைவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது அது ரூ.9,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அணை கட்டப் படும் நிலப்பரப்பு 4716 ஹெக்டேராக இருக்கும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது  அணை கட்டப்படும் நிலத்தின் அளவு 5252 ஹெக்டேராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், நீர்த்தேக்கப் பரப்பும் 4996 ஹெக்டேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மேகதாது அணையின் மொத்தக் கொள்ளளவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 67.14 டி.எம்.சி என்ற அளவிலிருந்து அதிகரிக்கப் படக்கூடும் என்றும், இது 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104.59 டி.எம்.சி ஆகும். இந்த நிலையில் மேகதாதுவில் 70 டி.எம்.சி அளவுக்கு புதிய அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளின் கொள்ளளவு 175 டி.எம்.சியாக இருக்கும். இது மேட்டூர் அணையின் மொத்தக் கொள்ளளவை விட இரு மடங்காகும்.  

கர்நாடகத்தின் நீர்த்தேக்கத் திறன் இந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டால், கர்நாடகம் அதன் தேவைக்காக கூடுதல் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளுமே தவிர, நிச்சயமாக தமிழகத்திற்கு திறந்து விடாது.  அதனால் மேகதாது அணை கட்டப்பட்ட சில ஆண்டுகளில் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்.

காவிரி ஆற்றின் முதல்மடை மாநிலமான கர்நாடகம், காவிரியின்குறுக்கே ஏதேனும் புதிய அணை கட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு கடைமடை மாநிலமான தமிழகத்தின் அனுமதியை பெற வேண்டும். இது காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில்., மேகதாதுவில் புதிய அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.  கர்நாடக அரசின் கடிதத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.  மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுப்புற சூழல் அனுமதியை கொடுக்க முடியாது என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

ஆணையம் உத்தரவிட்ட நீரை திறந்து விடாமல், புதிய அணை கட்டினால் தான் தண்ணீர் திறக்க முடியுமென ஓர் அராஜக மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுவது, அரசியல் சட்டம், நீதிமன்ற தீர்ப்பை துச்சமென மதிக்கும் செயல் என சாடியுள்ளார்.

Trending News