இதுதான் திமுக அரசின் சமூக நீதியா?- சீமான் கண்டனம்

ஹிஜாப் தடைக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளைக் கைது செய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 21, 2022, 08:49 PM IST
  • எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி போன்ற பாஜக தலைவர்கள் மீது கைவைக்கத் தயங்குவதேன்?
  • அடக்குமுறையை ஏவிவிடுவது ஏற்கவே முடியாத எதேச்சதிகாரப் போக்காகும்
  • இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? வெட்கக்கேடு!
இதுதான் திமுக அரசின் சமூக நீதியா?- சீமான் கண்டனம்  title=

ஹிஜாப் தடைக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளைக் கைது செய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: 

''கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக அதன் நிர்வாகி தம்பி கோவை தம்பி ரகமத்துல்லாஹாவையும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக அதன் நிர்வாகிகளான, தம்பி ஜமால் உஸ்மானி ஆகியோரையும், அதே கோரிக்கையை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொருளாளர் தம்பி சாதிக் பாட்ஷாவையும் திமுக அரசு கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாட்டை ஆளும் பாஜக அரசால் அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது உரிமைகள் பறிக்கப்படும் நிலையில், அதற்கெதிராகப் போராடி அறச்சீற்றத்தையும், உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்துகிற வேளையில், இசுலாமியப் பெருமக்களுக்குத் துணை நிற்காது அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

மேலும் படிக்க |  ”திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின்” - பேரவையில் புகழ்ந்து தள்ளும் எம்.எல்.ஏ-க்கள்

அரசதிகாரத்தின் மூலமோ, ஆதிக்கத்தின் மூலமோ ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, பாதிக்கப்பட்டு நிற்கிற மக்களின் பக்கம் நிற்பதே அறம். அதுவே சமூக நீதியுமாகும்! அவ்வாறு, ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு, சட்டத்தின் வாயிலாகவே வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இசுலாமிய மக்களின் பக்கம் நின்று, அவர்களுக்காகக் குரலெழுப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு நேர்மாறாக அவர்கள் மீதே அடக்குமுறையை ஏவிவிடுவது ஏற்கவே முடியாத எதேச்சதிகாரப்போக்காகும். 

சீமான்

அநீதிக்கெதிரான தங்களது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆத்திரத்தில் வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு ஜார்ஜ் பொன்னையா, தடா ரஹீம் போன்றவர்களைக் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தி, சிறைப்படுத்தும் திமுக அரசு, சமூகப்பூசலை உருவாக்கும் விதமாகத் தொடர்ச்சியாகப் பேசி வரும் எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி போன்ற பாஜக தலைவர்கள் மீது கைவைக்கத் தயங்குவதேன்? 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டும்கூட தில்லை தீட்சிதர்களைக் கைது செய்ய மறுப்பதேன்? எமது இசுலாமியச் சொந்தங்களுக்கு ஒரு நீதி! அநியாயம் செய்திடும் இந்துத்துவ நபர்களுக்கு ஒரு நீதியா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? வெட்கக்கேடு!

மேலும் படிக்க |   மதிமுகவை திமுகவுடன் இணைக்க வைகோ முயற்சி - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்

ஆகவே, ஹிஜாப் தடைக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய  கோவை ரகமத்துல்லாஹ், தம்பி ஜமால் உஸ்மானி உள்ளிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற்று. உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News