பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத் திருத்தத்தை சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 07:39 PM IST
  • ஆளுநர் பதவி தேவையற்றது என்பதே மார்க்சிஸ்ட் நிலைப்பாடு
  • ஆளுநர் நியமனம் அரசியல் நியமனமாக இருக்கக் கூடாது
  • நியமனம், மாற்றம் அனைத்தும் மாநில அரசின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும்
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்  title=

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சேலத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ. சவுந்தரராசன், பி. சம்பத், உ. வாசுகி உள்ளிட்டு மாநிலச் செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இன்றைய இரண்டாம் நாள் (15.3.2022) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை: 

தீர்மானம் - 1:

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிட வேண்டும்: தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே அண்மைக் காலத்தில் முரண்பாடு முன்னுக்கு வருவதைத் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்  உள்ளிட்ட  மாநிலங்களில் காணமுடிகிறது. புதுச்சேரி கடந்த காலத்தில் இதனைக் கடுமையாகச் சந்தித்தது. குறிப்பாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம், மாநில அரசு உருவாக்குகிற சட்டம் அல்லது சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளில் இந்த முரண்பாடு பிரதிபலித்து வருகிறது. அதிமுக ஆட்சியின்போது, கட்சிக்குள் எழுந்த பிரச்சினைகளில் ஆளுநர் தலையிட்டு, மத்தியில் ஆளும் கட்சியின் முகவர் போலச் செயல்பட்டது இப்போக்கின் உச்சகட்ட வெளிப்பாடு. பல்வேறு மாநிலங்களில்  ஆட்சி அமைக்கப்படும் போது அல்லது கவிழ்க்கப்படும் போது ஆளுநர்களை மத்திய அரசு அப்பட்டமாகப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தற்போது தமிழ்நாடு ஆளுநர், தென்மண்டலத் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை மிகுந்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு சூழலில் கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம் பெற்றுள்ள நிலையில், மாநில நிலைப்பாட்டுக்கும், நலனுக்கும் எதிராக ஆளுநர் பேசியிருக்கிறார். அதேபோல், மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்று அரசியல் சாசனம் குறிப்பிடுவதில் பிரதிபலிக்கும் பன்மைத்துவம் மற்றும் கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தளர்த்தும் விதமாக, மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தைச் சிதைக்கும் விதமாக,  இது இயல்பான ஒன்றிணைப்பு (Organic union) என்றும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரு முனையிலிருந்து மறு முனை வரை கலாச்சார ஆன்மிக மாண்புகளின் அடிப்படையில்  நீடித்து வந்துள்ளது என்றும்  பேசியுள்ளார். இத்தகைய பேச்சு உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்த குரல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்பைத் தாண்டியதாகவே கருத முடியும். இது கண்டிக்கத்தக்கது.

வேந்தராக இருந்து துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாநிலச் சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு அளிக்கப்படுவதே. மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டத் திருத்தத்தின் மூலம் அந்த அதிகாரம் ஆளுநரிடமிருந்து அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதனைப் பரிசீலித்து, சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, ஆளுநர் அதிகாரத்தை அகற்ற வேண்டும் என தமிழக அரசை மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

ஆளுநர் பதவி தேவையற்றது என்பது தொடக்கத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. தற்போதைய சூழலில் இந்த விவாதம், மத்திய, மாநில உறவுகள் சீரமைப்பு என்ற சட்டகத்தின் பின்புலத்தில்  மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவரை ஆளுநர் நியமனம் அரசியல் நியமனமாக இருக்கக் கூடாது என்பதோடு, நியமனம், மாற்றம் அனைத்தும் மாநில அரசாங்கங்களின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும் என்பதை இம்மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க | பட்ஜெட்டில் பெண்களுக்கு 1000 ரூ : அரசு சொல்வது என்ன?

தீர்மானம் - 2:

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டு பல்கலைக்கழகங்களில் அவுட் சோர்சிங்கைக் கைவிடுக!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் பாரம்பரியமான தொழிழ்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகும். இதன் வளர்ச்சி உலகப் புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் கூட்டான பயிற்சி வகுப்புகளை நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிதிப் பற்றாக்குறை என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத தொழில்நுட்ப ஊழியர்களை அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 10 முதல் 17 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் சுமார் 500 ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் மேற்படி முடிவு காரணமாக வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இவர்களில் பெரும்பான்மையோர் பி.இ., போன்ற பட்டம் பெற்றவர்கள். இனி வெளியில் வேறு வேலைகளைத் தேடும் வாய்ப்பு இல்லை. எனவே பல்கலைக்கழகம் மேற்படி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்திட, தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க |  தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு; மே 1 முதல் முழு மதுவிலக்கு: பாமக நிழல் பட்ஜெட்டின் அசத்தலான 52 அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News