SPB: இசையின் சிகரம் சரிந்தது... சிகரம் கடந்து வந்த பாதை...!!!

SPB பாடகர் மட்டும் அல்ல, அஷ்டாவதானி எனக் கூறலாம், பாடகர் என்பதைத் தாண்டி, இசை அமைப்பாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபல நடிகர்களுக்கு டப்பிங் என பன்முக திறமை கொண்ட கலைஞர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2020, 05:00 PM IST
  • SPB-யின் இசை சாம்ராஜ்ஜியம் தமிழ்நாட்டையும் தாண்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியம்.
  • இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியுள்ளது.
  • S.P.பாலசுப்ரமணியம், 1980 ஆம் ஆண்டு "சங்கராபரணம்" என்ற திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
SPB: இசையின் சிகரம் சரிந்தது... சிகரம் கடந்து வந்த பாதை...!!! title=

பாடும் நிலா, இசையின் சிகரம் இன்று நம்மிடையே இல்லை. ஆம், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் SPB, காலமானார்.

மூன்று தலைமுறை ரசிகர்களை, தனது இசை திறமையினால், தனது பாடல்களால் கட்டிப் போட்ட இசை இமயம் சரிந்த செய்தி இடியாக இறங்கியுள்ளது.SPB-யின் இசை சாம்ராஜ்ஜியம் தமிழ்நாட்டையும் தாண்டி, தெலுங்கு, கன்னடம், இந்தி என பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியம். 

அவர் பாடகர் மட்டும் அல்ல, அஷ்டாவதானி எனக் கூறலாம், பாடகர் என்பதைத் தாண்டி, இசை அமைப்பாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபல நடிகர்களுக்கு பின்னணி குரல்  கொடுப்பது என பன்முக திறமை கொண்ட கலைஞர்.

தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் 1969 ஆண்டு வெளிவந்த எம்ஜிஆர் படமான  ‘அடிமைப்பெண்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’  என்ற பாடல்.

ஆனால், அதே ஆண்டு வெளியான ஜெமினி கணேசன் நடித்த, ‘சாந்திநிலையம்‘ என்ற படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல்தான் முதலில் ரெகார்ட் செய்யப்பட்டது.  முதலில் வெளியானது தான் ஆயிரம் நிலவே வா என்ற பாடல்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நாற்பதாயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

அவர் திரைத்துறையில் உச்சத்தில் இருந்தகாலத்தில் ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்

அவரது இயற்பெயர், ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம். சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூரில் எஸ்.பி. சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாமா தம்பதியினருக்கு  மகனாக பிறந்துள்ளார். அவரது தந்தை எஸ்.பி. சம்பமூர்த்தி ஒரு ஹரிகாதா கலைஞராக இருந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாடகர் எஸ்.பி. சைலாஜா உட்பட இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் உள்ளனர்.

தனது சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வம் அதிகம் இருந்தது.  பொறியியல் படிப்பு தொடர்ந்து போதும் அவரது இசை ஆர்வம் தொடர்ந்தது. 

பாலசுப்ரமணியம் தனது பொறியியல் படிப்பின் போது பல இசை சம்மந்தமான பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்துள்ள இவர், பாடல் போட்டிகளில் பங்குபெற்று பல விருதுகளை வென்றார். 1964 ஆம் ஆண்டில், மெட்ராஸை தளமாகக் கொண்ட தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த அமெச்சூர் பாடகர்களுக்கான இசை போட்டியில் முதல் பரிசை வென்றார். 

எஸ்.பி.பியின் திறமையைப் கண்டு வியந்து,  'ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவரை பாடகராக அறிமுகம் செய்தார் கோதண்டபாணி. பின்பு கன்னட மொழியிலும் பாடகராக அறிமுகமானார். அதற்கு பின்னர் 1969-ம் ஆண்டு தமிழில் தனது இசை பயணத்தை தொடக்கினார்.

மேலும் படிக்க | LIVE #RIPSPB: #SPB -யின் உடல் மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து செல்லப்படும்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், 1980 ஆம் ஆண்டு "சங்கராபரணம்" என்ற திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் பலரின் கவனத்தை ஈர்த்தார். இதில் ஆச்சர்யமான ஒரு விஷயம் என்னவென்றால், அவர் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றவர் அல்ல.

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த்தார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள அவர் குவித்த  விருதுகள் ஏராளம். 

இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியுள்ளது

1981ஆம் ஆண்டு,  ஏக் துஜே கே லியே  என்ற கமல் நடித்த இந்தி படத்திற்கு அவருக்கு பின்னணி பாடகருக்கான மற்றொரு தேசிய திரைப்பட விருது கிடைத்தது.

பல முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்கு பாடிய பாடலுக்காக பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.

SPB தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இன்று இசையின் சிகரம் நம்மிடையே இல்லை என்றாலும், அவர் தனது பாடல்கள், இசையின் மூலம் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

Trending News