மெரினா போராட்டக்களமானது- போராட்டக்காரர்கள் மீது தடியடி

Last Updated : Jan 23, 2017, 12:03 PM IST
மெரினா போராட்டக்களமானது- போராட்டக்காரர்கள் மீது தடியடி title=

மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதட்டம் அதிகரித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, ஆனால் நிரந்தர சட்டம் வேணும் என்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பில் பல்வேறு முறை விளக்கம் அளிக்கப்பட்டும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுக்கிறார்கள். 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டக்காரர்களை வெளியேற்றும் பணியை போலீசார் தொடங்கி நடத்தி வருகிறார்கள். வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறார்கள். இன்று காலையில் மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இன்று சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ள ஜல்லிக்கட்டு சட்ட முன் வடிவு நகலை காட்டி கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் மாணவர்கள், இளைஞர்கள் மறுப்பு தெரிவிக்கவே, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் தொடங்கினர். 

முதலில், பெண்கள், குழந்தைகள் என பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிலர் தாங்களாகவே வெளியேறினர். ஆனால், போராட்டக்காரர்கள் பலரும் கடலை நோக்கி ஓடினர். கடற்கரை மையப்பகுதிக்குச் சென்று இளைஞர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். ஆனால் இளைஞர்கள் கடல் பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் அங்கேயே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ராயப்பேட்டையில் போலீசார் தடுப்பையும் மீறி மெரினாவில் போராடுபவர்கள் ஆதரவு தெரிவிக்கும் விதமாக செல்ல முயற்சித்தவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இளைஞர்கள் தடுப்புகளை உடைத்து நுழைய முயற்சித்த போது போலீசார் லேசான தடியடியை நடத்தினர். சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் போலீசார் மீது கையில் கிடைத்த பொருட்களை வீசினார்கள். போலீசார் மீது மணல், செருப்பு வீசப்பட்டது.  திருவல்லிக்கேணி சாலைப் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. 

Trending News