உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில்... நன்றித் தெரிவித்த தமிழக முதல்வர்

உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் தமிழ் மொழியில் பதிவேற்றம். மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றித் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 19, 2019, 07:08 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில்... நன்றித் தெரிவித்த தமிழக முதல்வர் title=

சென்னை: உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் தமிழ் மொழியில் பதிவேற்றம் செய்து நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் ஆதரவு காணப்பட்டது. அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்ற தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன. மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பதிவேற்றத்தில் செம்மொழியான தமிழ் மொழி இடம் பெறாததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து தற்போது அதிகமான வழக்குகள் வரும் மொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். அடுத்த பட்டியலில் மற்ற மொழிகளையும் சேர்க்கப்படும். அதில் தமிழ் மொழி இடம் பெரும் என உச்சநீதிமன்றம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

நேற்று முன்தினம் மாலை உச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மொழி பெயர்ப்புகளில் தமிழ் இடம் பெறவில்லை. இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

இதனையடுத்து, நேற்று 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு விபரங்கள் சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 98 மற்றும் 99 இடங்களில் இருந்த இரண்டு தமிழக வழக்கின் தீர்ப்பு, தமிழிலில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டன.

முதலில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வழக்கு தான் தமிழ் மொழியில் உச்சநீதிமன்றத்தால் பதிவேற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து நீலகிரியை சேர்ந்த ஜோசப் ஈஸ்வரன் வாப்ஷேரின் சொத்துக்கள் தொடர்பாக அவரது வாரிகள் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், "உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மற்றும் மற்ற மாநில மொழிகளில் வெளியிட வழிவகை செய்ததற்கு நன்றிகள். தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடுவதன் மூலம், அவற்றை மக்கள் எளிதில் அறிந்துக்கொள்ள முடியும். 

அதேபோல சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் தமிழ் மொழியில் வெளியிட வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Trending News