Israel Hamas Conflict: விடிய விடிய தாக்குதல்.. பெண்கள், குழந்தை என இதுவரை 1600 பேர் பலி

Israel Vs Palestine War: பாலஸ்தீனர்கள் மனித மிருகங்கள். அவர்களை முற்றிலுமாக அழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன் என இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் யோவ் கேலன்ட் கூறியுள்ளார். இரு தரப்பிலும் சுமார் 1600 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 10, 2023, 11:24 AM IST
  • 900 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
  • பாலஸ்தீனர்கள் 704 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 4000 பேர் காயமடைந்துள்ளனர்.
  • குடிநீர், உணவு, மின்சாரம் எதுவும் கிடையாது. பாலஸ்தீனர்கள் மனித மிருகங்கள் -இஸ்ரேல்.
Israel Hamas Conflict: விடிய விடிய தாக்குதல்.. பெண்கள், குழந்தை என இதுவரை 1600 பேர் பலி title=

Israel Vs Palestine: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த 72 மணி நேரமாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 2,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அதே நேரத்தில், காசா பகுதியில் 704 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 4000 பேர் காயமடைந்து உள்ளனர். காசாவில் கொல்லப்பட்டவர்களில் 143 குழந்தைகளும் 105 பெண்களும் அடங்குவர். இதுமட்டுமின்றி லெபனானிலும் இதன் தாக்கம் தெரிகிறது. லெபனானில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 

ஒட்டுமொத்தமாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இரு தரப்பிலும் சுமார் 1600 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர் மற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அங்கு தொடர் துப்பாக்கி சூடு, வான்வழித் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் மக்கள் திசை தெரியாமல் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்து ஓடும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

 

தடை செய்யப்பட்டுள்ள குண்டுகளை பயன்படுத்திய இஸ்ரேல்

இந்த மோதலில் முதன் முறையாக உலகில் தடை செய்யப்பட்டுள்ள பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேயில் பயன்படுத்தி உள்ளது. இரவு முழுவதும் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன் பகுதியில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் Rabat University என்ற கல்விக் கூடம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு உள்ளது. காசாவில் உள்ள Saint Porphyrius என்ற உள்ள மிகப் பெரிய தேவாலயம் முற்றிலுமாக குண்டு வீச்சில் நொறுங்கியது. 

மேலும் படிக்க - இஸ்ரேலில் ஹமாஸ் படை தாக்குதல்: தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் பலி!

பாலஸ்தீனர்கள் மனித மிருகங்கள் -இஸ்ரேல் அமைச்சர்

போர் நடக்கும் போது குடிநீர் உட்பட எந்த அத்தியாவசிய அடிப்படை தேவையும் மக்களுக்கு மறுக்க படக்கூடாது என்பது ஐ.நா‌ விதி‌ ஆகும். ஆனால் அந்த விதிகளை கொஞ்சமும் மதிக்காமல் பாலஸ்தீன மக்களுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தம். இஸ்ரேலின் போர் அமைச்சர் யோவ் கேலன்ட் கூறுகையில், குடிநீர், உணவு, மின்சாரம், பெட்ரோல், டீசல் எதுவும் கிடையாது. அவர்களை முற்றிலுமாக அழிக்க நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன். பாலஸ்தீனர்கள் மனித மிருகங்கள் எனக் கொடூரமான வாரத்தைகளை கூறியுள்ளார்.

இஸ்ரேல் Vs ஹமாஸ் மோதல் நிறுத்தப்படுமா?

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பில் இருந்தும் யாரும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை, அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை என்றே தெரிகிறது. ஒருபக்கம் தாக்குதலை நிறுத்தாவிட்டால், இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஒவ்வொருவராக கொல்லத் தொடங்குவோம் என்று இஸ்ரேலை ஹமாஸ் எச்சரித்துள்ளது. மறுபுறம் நாங்கள் பின்வாங்க போவதில்லை. ஹமாஸின் நடவடிக்கைக்குப் பிறகு, பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இஸ்ரேல் தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டு உள்ளது.

ஹமாஸ் போரை ஆரம்பித்தது, நாங்கள் அதை முடிப்போம் -இஸ்ரேல்

பாலஸ்தீன அமைப்பான ஹமாஸுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதம்ர் நெதன்யாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹமாஸுக்கு எதிராக நாம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் அவர்களின் வருங்கால சந்ததியினருக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். ஹமாஸ் போரை ஆரம்பித்துள்ளது. இப்போது அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எங்கள் பகுதியில் இன்னும் ஏராளமான பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். லெபனான் மற்றும் மேற்குக் கரையுடனான நமது எல்லையை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். நாங்கள் முன்னேறுவதற்கு சர்வதேச ஆதரவைப் பெற விரும்புகிறோம். ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்படும் தளங்கள் விரைவில் இடிபாடுகளாக மாறும். காசா பகுதியைச் சுற்றியுள்ள நகரங்களில் தஞ்சம் புகுந்துள்ள பயங்கரவாதிகளை விரட்டி அவர்களை நகரத்தை காலி செய்ய வைப்பதே எங்களின் முதல் பணி என்றார்.

மேலும் படிக்க - 5000 ராக்கெட்டுகள் தாக்குதல்.. 200 பேர் பலி; போரை அறிவித்த இஸ்ரேல் - அடுத்தது என்ன?

நாங்கள் கொடுக்கும் பதிலடி பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும் -இஸ்ரேல் பிரதமர்

அதேநேரத்தில் சர்வதேச ஆதரவுக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் எல்லைக்குள் பாலஸ்தீன பயங்கரவாதிகள் இன்னும் உள்ளனர். நம் எதிரிகளுக்கு நாம் தரும் பதிலடி தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும். இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் நாம் கடினமான காலங்களை கடந்து வருகிறோம். ஆனால் வெற்றி நமதே என்ற நம்பிக்கை உள்ளது. ஹமாஸ் என்பது ISIS இன் மற்றொரு வடிவம். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எப்படி முடிவெடுத்தோமோ, அதே வழியில் இதையும் முடிப்போம்" என்றார். மேலும் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் நமது எல்லைக்குள் வந்து சேர்ந்தால் என்ன அர்த்தம் என்பதை இஸ்ரேலின் எதிரிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.

 

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ஹமாஸ்

கடந்த சனிக்கிழமை (2023 அக்டோபர் 07) அதிகாலை பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலாக இருந்தது என அங்கிருந்த ஊடகங்கள் கூறியுள்ளது. ராக்கெட் தாக்குதலை அடுத்து, தெற்கு இஸ்ரேலுக்குள் ஆயுதமேந்திய போராளிகள் நுழைந்து, பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி, பலரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க - மனித மூளைக்குள் மைக்ரோசிப்... எலான் மஸ்கின் நியூராலிங்க் ஆராய்ச்சிக்கு அனுமதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News