பயன்படுத்தாத வங்கிக்கணக்குகளை உடனடியாக மூடி விடுங்கள்: இல்லையென்றால் சிக்கல்!!

Bank Account: வங்கிக் கணக்கை திறப்பதற்கு எந்தவித வரம்பும் கிடையாது. இதன் காரணமாக இன்றைய காலகட்டத்தில் ஒரு நபரே பல வங்கி கணக்குகள் வைத்திருக்கும் சூழலும் உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2024, 02:56 PM IST
  • குறைந்தபட்ச இருப்பு அவசியமாகும்.
  • பல வித கட்டணங்களை செலுத்த வேண்டும்.
  • ITR தாக்கலின் போது சிக்கல்.
பயன்படுத்தாத வங்கிக்கணக்குகளை உடனடியாக மூடி விடுங்கள்: இல்லையென்றால் சிக்கல்!! title=

Bank Account: இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் வங்கி கணக்கு உள்ளது. முந்தைய காலங்களில் வங்கி கணக்கை திறப்பது என்பது ஒரு மிகப்பெரிய செயல்முறையாக இருந்து வந்தது. நன்கு படித்தவர்களால் மட்டுமே வங்கிக்கு சென்று ஒரு கணக்கை திறக்க முடியும் என்ற ஒரு எண்ணமும் இருந்து வந்தது. எனினும் காலப்போக்கில் இது தவறு என்பது புரிந்து கொள்ளப்பட்டது. படிக்காதவர்களும் பாமர மக்களும் மிக எளிய வகையில் வங்கி கணக்குகளை திறக்க முடியும். அதுவும் தொழில்நுட்பம் மிக அதிகமாக வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் வங்கிக்கணக்கை திறப்பது என்பது சுலபமான விஷயமாக மாறிவிட்டது.

பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகள்

வங்கிக் கணக்கை (Bank Account) திறப்பதற்கு எந்தவித வரம்பும் கிடையாது. இதன் காரணமாக இன்றைய காலகட்டத்தில் ஒரு நபரே பல வங்கி கணக்குகள் வைத்திருக்கும் சூழலும் உள்ளது. எனினும் இப்படி பல கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள் இவற்றில் பெரும்பாலான கணக்குகளை உபயோகிப்பதே இல்லை. இந்த கணக்குகள் செயலில் இருந்தாலும் இவற்றில் பயன்பாடு பெரிதாக எதுவும் இருப்பதில்லை. உங்களிடமும் இப்படி செயலில் இருந்து ஆனால் பயன்படாத வங்கி கணக்குகள் (Unused Bank Accounts) இருக்கின்றனவா? அப்படி என்றால் அவற்றை உடனடியாக மூடி விடுவது நல்லது. செயல்படுத்தப்படாத அல்லது பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை நீங்களும் வைத்து இருந்தால் உங்களுக்கு நஷ்டங்கள் ஏற்படுவதுடன் சில சிக்கல்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். அது பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

பலர் பல வங்கிக் கணக்குகளை திறந்து விடுகிறார்கள். ஆனால் அனைத்தையும் பயன்படுத்துவதில்லை. எனினும் பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகள் இருந்தால் அதனால் நஷ்டம் ஏதும் நமக்கு ஏற்பட போவதில்லை என்பதே இவர்களது எண்ணமாக உள்ளது. எனினும் இது தவறான ஒரு புரிதலாகும். பயன்படுத்தப்படாத பல வங்கிக் கணக்குகள் இருந்தால் ஏற்படக்கூடிய நஷ்டங்கள் பற்றி இங்கே காணலாம்.

குறைந்தபட்ச இருப்பு அவசியமாகும்

பெரும்பாலான வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி (Minimum Monthly Balance) இருப்பை பேணுவது அவசியமாக உள்ளது. இந்த இருப்பின் தொகை 500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கூட இருக்கலாம். இந்தத் தொகையை பராமரிக்கவில்லை என்றால் அந்தந்த வங்கிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். 

சம்பள கணக்கு

தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படவில்லை என்றால் பூஜ்ஜிய இருப்பு அதாவது ஜீரோ பேலன்ஸ் உள்ள வாடிக்கையாளரின் சம்பளக் கணக்கும் (Salary Account) சேமிப்பு கணக்காக மாற்றப்படும். இந்த வகையில் எந்த காரணமும் இல்லாமலேயே நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். ஆகையால் ஒரு வங்கிக் கணக்கு படுத்தப்படாத போது அதை மூடி விடுவது நல்லதாகும்.

மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: வட்டி விகிதத்தை அதிகரித்தது EPFO

பல வித கட்டணங்களை செலுத்த வேண்டும்

வங்கிகள் பொதுவாக டெபிட் கார்டு மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்களை வசூலிக்கின்றன. டெபிட் கார்ட் கட்டணங்கள் ஆண்டுக்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இருக்கக்கூடும். எஸ் எம் எஸ் கட்டணங்களும் பொதுவாக அதிகமாகவே இருக்கின்றன. நீங்கள் உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்தாவிட்டாலும் இந்த கட்டணங்களை செலுத்தித்தான் ஆக வேண்டும். இவற்றை வீணாக செலுத்துவதை தவிர்க்க பயன்படாத வங்கிக் கணக்குகளை மூடுவது லாபகரமானதாக இருக்கும்.

ITR தாக்கலின் போது சிக்கல்

வருமான வரி கணக்கு (Income Tax Return) தாக்கல் செய்யும்போது நம்மிடம் உள்ள அனைத்து வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களையும் நாம் அளிக்க வேண்டும். இதற்கு நம் கணக்குகள் உள்ள அனைத்து வங்கிகளிடமிருந்தும் அறிக்கைகளை அதாவது ஸ்டேட்மென்ட்களை பெற வேண்டும். கணக்குகளை பயன்படுத்தாவிட்டாலும் கணக்குகளின் அறிக்கைகள் பெறப்பட்டு ITR -இல் குறிப்பிடப்பட வேண்டும். பயன்படுத்தாத வங்கி கணக்கிற்காக இத்தனை பணிகளை செய்வது தேவையற்ற ஒரு செயலாக இருக்கும். ஆகையால் பயன்படுத்தாத கணக்குகளை மூடி விடுவது நல்லதாகும்.

வங்கி கணக்குகள் தவறாக பயன்படுத்தப்படலாம்

ஒரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால் மோசடிக்காரர்கள் அதை பயன்படுத்தி பெரிய மோசடிகளை செய்ய வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பல நிகழ்வுகள் பற்றிய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தங்களுடைய கணக்கில் தான் இப்படிப்பட்ட மோசடிகள் நடக்கின்றன என்பது கூட அந்த கணக்கு வைத்திருப்பவருக்கு தெரியாமல் போய்விடுகின்றது. ஆகையால் நமது கணக்கை வேறொருவர் தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்க நாம் பயன்படுத்தாத வங்கி கணக்குகளை மூடி விடுவது அவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

மேலும் படிக்க | பாடாய் படுத்தும் லோன் ரெகவரி ஏஜெண்டுகள்.... வங்கிகளை எச்சரித்து வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் RBI விதிகள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News