காவிரி விவகாரம்: மன்னிக்க முடியாத துரோகத்தை செய்யும் மத்தி அரசு -ஸ்டாலின்

திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 9, 2018, 07:22 AM IST
காவிரி விவகாரம்: மன்னிக்க முடியாத துரோகத்தை செய்யும் மத்தி அரசு -ஸ்டாலின் title=

நேற்று (08-05-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகூட்டம் நடைபெற்றது. அதில், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு, மனமுடைந்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மொத்தம் 9 கட்சிகள் பங்கேற்றன. முக்கியமாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் மத்திய அரசு அவகாசம் கேட்டு உள்ளதால், இந்த அனைத்துக் கட்சி கூட்டம் சார்பாக மிகுந்த வருத்தத்தை பதிவு செய்யப்பட்டது. காவிரிக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி பின்வருமாறு:-

தீர்மானம்:

“காவிரி மேலாண்மை வாரியம் - அடுத்தகட்ட நடவடிக்கை”

2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு உரிய நீதியை வழங்காமல் அலட்சியப்படுத்திடும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதனைத் திரித்தும் திசை திருப்பும் வகையிலும் வேறு வேறு பொருள்பட அறிவிப்புகளைச் செய்து, ஏறக்குறைய மூன்று மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது மட்டுமின்றி, கர்நாடகத் தேர்தல் கணக்கை மனதில்கொண்டு, பலமுறை “கால அவகாசம்"" கோரும் மனுக்கள் தாக்கல் செய்து, ஒரு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைத் திட்டமிட்டு சவாலுக்கு அழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதலில் விதித்த ஆறுவார காலக்கெடுவும் முடிந்து, பிறகு கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி வாய்தா வாங்கி, மீண்டும் மே 3-ஆம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது “பிரதமரும் அமைச்சரும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதலைப் பெற முடியவில்லை"" என்று, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் அறிந்தோர் அனைவரும் நகைத்திடும் வண்ணம் “கால அவகாசம்"" கேட்டு, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், கூச்சமே இன்றி மீண்டும் பத்துநாள் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் மே 14-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதற்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டம் மிகுந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறது.

நீதித்துறை சுதந்திரத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை கவலையுடனும், அதிர்ச்சியுடனும் பார்க்கும் சூழ்நிலை காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உருவாகியிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் நிச்சயமாக உகந்த சூழலாக இல்லை என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழக மக்கள் உச்ச நீதிமன்றத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு, பல்வேறு முறை கால அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் அனுமதித்து, இறுதியில் கர்நாடகத் தேர்தல் முடியும் வரை கால அவகாசத்தைப் பெற்றிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டு விவசாயிகளையும் பொதுமக்களையும் திட்டமிட்டு வஞ்சிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பாரம்பரியமான காவிரி உரிமையை கர்நாடகத் தேர்தலுக்காக காவு கொடுத்து வருவது தமிழகத்தையே பதற வைக்கிறது.

காவிரி உரிமையை நிலைநாட்ட, நடைபெற்ற ஜனநாயக வழியிலான அறப்போராட்டங்களில் தன்னெழுச்சியாகப் பங்கேற்ற அனைத்துத் தரப்பு மக்களுக்கும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தும் இந்த துரோகம் கோபத்தையும், கொந்தளிப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டங்களில் நம்பிக்கை இழக்கும் நிலையையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியிருப்பதை இந்த அனைத்துக்கட்சி கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. சாலை மறியல், முழு அடைப்பு, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம், மேதகு ஆளுநரிடம் மனு, மனித சங்கிலிப் போராட்டம் என்று அனைத்து விதமான அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவில்லை.

அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க அரசு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் அனைத்து "கால அவகாசம்" கோரும் போக்கிற்கும் மனமுவந்து துணை போவது மட்டுமின்றி வழக்கின் முக்கியத்துவத்தை திசை திருப்பும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறது. "கர்நாடக மாநில அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்" என்று வழக்கு விசாரணையின்போது கூறிய போதிலும், மே 8-ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற ஆணையில் அந்த உத்தரவு இடம்பெறவில்லை.

காவிரி நதிநீர் பிரச்சினையில் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து வரும் மத்திய அரசையும் - அதற்கு துணை போகும் மாநில அரசின் நடவடிக்கையையும் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன்;

மே 14-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்றும்; மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் விதத்திலும், தமிழ்நாட்டு விவசாயிகளை வேதனைத் தீயில் தள்ளி, காவிரி மண்டலத்தை வறண்ட பாலைவனப் பிரதேசமாக்கவும் முனையும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - தமிழக விரோத மற்றும் ஜனநாயக விரோதப் போக்கு தொடருமாயின், வருகிற ‪15-5-2018‬ செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணி அளவில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News