வங்கக் கடலில் உருவானது குலாப் புயல்: வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இன்று மாலை ஒடிஸா- ஆந்திரா இடையே கரையை கடக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 26, 2021, 08:44 AM IST
வங்கக் கடலில் உருவானது குலாப் புயல்: வானிலை மையம் எச்சரிக்கை title=

வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருந்தது. அது மேலும் புயல் சின்னமாக வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு குலாப் (Cyclone Gulab) என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு பியார் புயலும், 2018-ம் ஆண்டு டாயி புயலும் (Cyclone), அதனைத்தொடர்ந்து தற்போது குலாப் புயலும் வந்திருக்கிறது. 

ALSO READ | Cyclone Gulab: ஒடிசாவை நாளை தாக்கும் புதிய புயல் குலாப்

இந்நிலையில் தற்போது இந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்திற்கு மேல் காற்று வீசும் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் வங்கக் கடல், அந்தமான் கடலின் மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல், நாளை மறுநாள் முதல் 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலால் சென்னை துறைமுகத்தில் 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அத்துடன் கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. 

ALSO READ | தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News