புகார் செய்த ஒருமணி நேரத்தில் ரயில் கழிப்பறை சுத்தம்!!

புகார் செய்த 60 நிமிடத்தில் ரயிலில் கழிப்பறையை சுத்தம் செய்த ரயில்வே துறை. 

Last Updated : Jan 30, 2018, 10:30 AM IST
புகார் செய்த ஒருமணி நேரத்தில் ரயில் கழிப்பறை சுத்தம்!! title=

ரயிலில் கழிப்பறை அசுத்தமாக இருந்தது குறித்து, பயணி ஒருவர் 'டுவிட்டர்' வாயிலாக, ரயில்வே அமைச்சருக்கு புகார் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில், அமைச்சரின் உத்தரவுப்படி, கழிப்பறை சுத்தம் செய்யப்பட்டதால், ரயில் பயணியர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். 

நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் இரயில், மதுரை, சேலம், தர்மபுரி வழியாக, தினசரி இரவு, 7:10 மணிக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின், 'எஸ் - 3' பெட்டியில், ஜெகன் என்பவர் நேற்று முன்தினம் பயணித்தார். அவருடன் கேரள மாநிலத்தவர் சிலரும் பயணித்துள்ளனர்.

ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறை சரியாக சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் அடித்தது. யாரும் கழிப்பறை பக்கம் செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால், ரயில்வே நிர்வாகத்தை, சக பயணியர் திட்டி தீர்த்தனர். அதே பெட்டியில் இருந்த கேரள பயணி ஒருவர், கழிப்பறையை போட்டோ எடுத்து, பயணியர் ஆத்திரம் குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயலின் அதிகாரப்பூர்வ, 'டுவிட்டர்' பக்கத்தில், இரவு, 8:00 மணிக்கு, தன் புகாரை பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில், இரவு, 9:00 மணிக்கு, ரயில் திருநெல்வேலி வந்தடைந்தது. அங்கு ரயில் நின்றதும், தயாராக இருந்த துப்புரவு பணியாளர்கள், ஓடிவந்து கழிப்பறையை சுத்தம் செய்தனர். அடுத்த சில நிமிடங்களில், புகார் செய்தவரின், 'டுவிட்டர்' கணக்கில், 'உங்கள் புகாருக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது' என, பதில் வந்தது. இரவு நேரத்திலும் துரிதமாக செயல்பட்ட அமைச்சரின் நடவடிக்கையை பயணியர் பாராட்டினர்.

Trending News