மம்தாவின் ஆட்சிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது -கிரிராஜ் சிங்!

மேற்குவங்கத்தி நடைப்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மம்தா பானர்ஜியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் என பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 9, 2019, 09:07 PM IST
மம்தாவின் ஆட்சிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது -கிரிராஜ் சிங்! title=

மேற்குவங்கத்தி நடைப்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மம்தா பானர்ஜியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் என பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்!

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நடைப்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு காரணம் திரினாமுல் காங்கிரஸ் கட்சி தான் என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நிகழ்ந்து வரும் பதற்றமான சூழல், திரினாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சமீபத்தில் தேர்தலில் அதிக இடங்களை வென்றது. இதன் காரணமாக தோல்வி விரக்தியில் இருக்கும் திரினாமுல் கட்சியினர் இவ்வாறு வன்முறை செயல்களில் ஈடுப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் நிகழும் வன்முறை குறித்து அம்மாநில அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுதிய கடிதத்தில்., "கடந்த சிலவாரங்களாக, மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு காப்பதில், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மாறாக, மாநில போலீசாரின் தோல்வியை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை காக்கவும், அமைதி, நிலவவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும். பணியில் ஒழுங்கீனமாக இருந்து கொண்டு, தங்களது கடமைகளை சரிவர செய்யாத அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சுட்டி காட்டப்பட்டுள்ளது.

மேலும் , வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவங்கள் தொடர்பாக கவர்னர் கேசரிநாத் திரிபாதியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கன்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் கவர்னருக்கு கவலை அளித்துள்ளது. இதில், பொது மக்கள் உயிர் இழந்ததும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் அடைந்ததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கவர்னர் இரங்கல் தெரிவித்துள்ளார். வன்முறை சம்பவங்கள் இனியும் நடக்காமல், மாநிலத்தில் அமைதி, சமூக நல்லிணக்கம் நிலவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

--- மேற்கு வங்க கலவரம் ---

மேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே வடக்கு 24 பர்கன்ஸ் மாவட்டத்தில் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் பாஜக தொண்டர்கள் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இது தொடர்பாக மாநில பாஜக-வினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிக்கின்றனர்.

பாஜக தொண்டர்களின் உயிர்களுக்கு நியாயம் கிடைக்காமல் தொண்டர்களின் உடலை அடக்கம் செய்யமாட்டோம் என பாஜக-வினர் மறுத்த தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்துகின்றனர். 

இதனையடுத்து கூச்பெகார் என்ற இடத்தில் நடைப்பெற்ற போராட்டத்தின் போது பாஜக மற்றும் திரிணமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கலவரமாக வலுப்பெற்று மாநிலத்தையே உலுக்கி வருகின்றது. இந்த கலவரம் தற்போது நாடுமுழுவதிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Trending News