பங்குனித் திருவிழா; மார்ச் 23-ல் தெய்வானை திருக்கல்யாணம்!

பிரசித்திப்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை திருக்கல்யாணம் வரும் மார்ச் 23-ஆம் நாள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2019, 12:05 PM IST
பங்குனித் திருவிழா; மார்ச் 23-ல் தெய்வானை திருக்கல்யாணம்! title=

பிரசித்திப்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை திருக்கல்யாணம் வரும் மார்ச் 23-ஆம் நாள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் வரும் மார்ச் 23-ஆம் நாள் நடைபெறுகிறது. 

நேற்று காலை கோயில் யானை தெய்வானைமீது கொடிப்பட்டம் வைத்து ரத வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. பின்னர் காலை 11:00 மணியளவில் சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். 

பங்குனி திருவிழாவிற்கான கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். கொடிகம்பத்தின் அடிப்பகுதியில் பால் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடத்தப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. 

திருவிழா நடைபெறும் மார்ச் 25-ஆம் நாள் வரை காலையில், தங்க சப்பரம், தங்க பல்லக்கு, இரவில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்னம், வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், பச்சைக்குதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 16-ஆம் நாள் இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சியும், மார்ச் 17-ஆம் நாள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 18-ஆம் நாள் காலையில் கங்காளநாதர், இரவு சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, மார்ச் 19 பச்சை குதிரை ஓட்டம், மார்ச் 20 பங்குனி உத்திரம், மார்ச் 21-ஆம் நாள் சூரசம்ஹார லீலை நடக்கிறது. 
மார்ச் 22-ஆம் நாள் பட்டாபிஷேகமும், மார்ச் 23-ஆம் நாள் திருக்கல்யாணமும், மார்ச் 24-ஆம் நாள் தேரோட்டமும், மார்ச் 25-ஆம் நாள் தீர்த்த உற்ஸவமும் நடைபெறுகிறது.

Trending News