இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

Sri Lanka Crisis: கொழும்பு மற்றும் பிற நகரங்களில் நடந்த வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2022, 01:32 PM IST
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.
  • இந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
  • கொழும்பு மற்றும் பிற நகரங்களில் நடந்த வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள் title=

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகளுக்கும், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் வலுவான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

 கொழும்பு மற்றும் பிற நகரங்களில் நடந்த வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களில் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். ராஜபக்ச ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கவிழ்ந்தது.

குறைந்தது 217 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி துவங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவில் கடந்த இரு நாட்களாக மிகப்பெரிய வன்முறை போராட்டம் நடந்துவருகிறது. ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவாளர்கள் வெறித்தனமான செயல்களில் ஈடுபட்டனர். நேற்று கொழும்புவில் அதிபர் அலுவலகத்திற்கு வெளியே முகாமிட்டிருந்த நிராயுதபாணி எதிர்ப்பாளர்களை அவர்கள் தாக்கினர்.

நேற்று மாலைக்குள், போராட்டம் தீவிரமடைந்தது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் பெற்றோருக்காக கட்டப்பட்ட நினைவிடத்தை அழித்த போராட்டக்காரர்கள், கொழும்பில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அம்பாந்தோட்டையில் உள்ள அவர்களது குடும்ப வீட்டிற்கு தீ வைத்தனர். மூன்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இரண்டு எம்.பி.க்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

மேலும் படிக்க | இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ச ராஜினாமா 

இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல நிட்டம்புவவில் தனது காரைத் தடுத்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் அருகில் உள்ள கட்டிடத்தில் அவர் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர் பீரங்கிகளை வீசியதுடன் கொழும்பில் உடனடி ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. பின்னர் அது நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது. குறைந்தது 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, 76 வயதான மகிந்த ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை தனது இளைய சகோதரர், அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி, "புதிய ஐக்கிய அரசாங்கத்திற்கு" வழிவகுத்திருந்தார். குறைந்தது இரண்டு கேபினட் அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. பல மாதங்களாக நிலவும் மின்தடை மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. எனினும், தற்போது போராட்டங்கள் வன்முறையின் வடிவம் கொண்டுள்ளன. 

மேலும் படிக்க |  பற்றி எரிகிறது இலங்கை; போராட்டக்காரர்களை தாக்கிய அரசு ஆதரவாளர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News