18 MLA தீர்ப்பு: டிடிவி தினகரன் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2018, 03:04 PM IST
18 MLA தீர்ப்பு: டிடிவி தினகரன் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு title=

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும்,  வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அப்போதைய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கடிதம் அளித்தனர். 

இதனால் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால். இதனையடுத்து சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியது. அதில், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் நீதிபதி சத்யநாராயணன் கூறினார்.

இதனால் 18 எம்.எல்.ஏ.க்களும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் என நினைத்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால் அவர்கள், இன்று சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது என தங்கத்தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

Trending News