'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!

தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களை போன்று திமுக அமைச்சர்கள் உள்ளனர் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் தோரணை மாறியுள்ளது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2022, 02:57 PM IST
  • வடகிழக்குப் பருவமழை வரும்போது திமுக ஆட்சியின் லட்சணத்தை பார்ப்போம் - ஜெயக்குமார்
  • ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா ஸ்டாலின் - ஜெய்குமார்
  • ஜாதி, மத கலவரங்கள் இல்லாமல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஒரே அரசு அதிமுக தான் - ஜெயக்குமார்
'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!  title=

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள்,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று (செப். 26) ஆலோசனை நடத்தினார். அதே போல், கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என்று பார்த்தார். சென்னையில் இருந்து மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சிலர், அதிமுகவில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர்.

மேலும் படிக்க | அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை மீட்டது சிஐடி!

'அமைச்சர்களின் தோரணையே மாறிவிட்டது'

திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை கண்டித்தும்,தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள்  மிக எழுச்சியாக நடைபெற்றது. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியுமா" என்று கேள்வி எழுப்பினார்.

பெண்கள் அனைவரும் ஓசி-யாக பேருந்தில் பயணம் செய்கின்றனர் என அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார்,"திமுக அமைச்சர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நினைத்துக் கொள்கின்றனர். அவர்கள் ஜமீன்கள், குறுநில மன்னர்களாக தங்களை  நினைத்துக் கொள்கின்றனர். பதவி வந்ததும் அமைச்சர்களின் தோரணை மாறி உள்ளது. 

'இஸ்லாமியர்கள் பயந்து நடுங்கிறார்கள்'

ஆந்திரப் படத்தில் வரும் அமைச்சர்களைப் போல் திமுக அமைச்சர்கள் உள்ளனர். பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியது பெண் இனத்தையே அவமானப்படுத்தும் செயல். அரசாங்க பணத்தில் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அவர்கள் என்ன பொன்முடியின் தந்தை வீட்டு பணத்தில் பயணம் செய்கிறார்களா" என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "பல்கலைக்கழக ஆசிரியரிடம் எப்படி முகத்தை காட்டினார் பொன்முடி என்பது அனைவரும் அறிந்ததே. திமுக அமைச்சர்களின் நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும். திமுக அமைச்சர்கள் பெண்களை இழிவுப்படுத்துவது, பட்டியலின மக்களை இழிவுப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார்கள். வரும் தேர்தலில் இதன் தாக்கம் நிச்சயம் எதிரொலிக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. திமுக ஆட்சியில் டிசம்பர் 6 என்றால் இஸ்லாமியர்கள் பயந்து நடுங்குவார்கள். ஜாதி, மத கலவரங்கள் இல்லாமல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஒரே அரசு அதிமுக தான்.

மேலும் படிக்க | 'அரசியலில் இருந்து விலக தயார், ஆனால் ...' - நிதியமைச்சரை சாடும் செல்லூர் ராஜூ

'திமுக தோண்டிய பள்ளமே, அவர்களுக்கு எமனாகும்'

தமிழகத்தில் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இந்த அரசை பார்த்து பயமில்லை. திராணி, திறன் இல்லாத அரசாக திமுக விளங்குகிறது. வெடிகுண்டு, கத்தி, கஞ்சா மற்றும் சூதாட்ட கலாச்சாரங்கள் திமுக ஆட்சியில் இன்றைக்கு நடைபெற்று வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பள்ளம் தோண்டி உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். திமுக தோன்றிய பள்ளமே இவர்களுக்கு எமனாக மாறும். வடகிழக்குப் பருவமழை வரும்போது இவர்களின் ஆட்சியின் லட்சணத்தை பார்ப்போம்" என்று நகையாடினார். 

தொடர்ந்து,"தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. அதில் கவனம் செலுத்தாமல், மனுதர்மம் போன்ற விஷயங்கள் குறித்து பேசி மக்களை திசை திருப்புகின்றனர். மின்சார விலையேற்றத்தால் யாரும் பாதிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி இருப்பது மிகப்பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது" என சாடினார்.

'ஆ.ராசாவை கைதுசெய்வாரா ஸ்டாலின்'

ஆ.ராசா சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு,"இந்தியாவில் மனுஸ்மிருதி ஆட்சியா நடக்கிறது? சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மக்கள் விலைவாசி உயர்வால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விவாதிக்க வேண்டிய பிரச்சனை நிறைய இருக்கும்போது தேவையற்ற சர்ச்சை கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுப்படுகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி பேசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பார். நேர்மையான, விருப்பு வெறுப்பற்ற அனைவருக்கும் பொதுவான முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார் என்றால் ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | 'எம்ஜிஆர் தலைமையை விட்டுவிட்டு வந்தேன்... போயும் போயும் இபிஎஸ் உடனா இணைவேன்'- சுப்புலட்சுமி ஜெகதீசன் தடாலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News