எதிர்க்கட்சிகளுக்குத்தான் சட்டப்பேரவையில் அதிக நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சட்டப்பேரவையை சிறப்பாக நடத்திய சபாநாயகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 10, 2022, 03:43 PM IST
  • இன்றோடு முடிந்தது தமிழக சட்டப்பேரவை மானிய விவாதம்
  • சிறப்பாக வழிநடத்திய சபாநாயகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
  • எதிர்கட்சி தலைவர், பேரவை உறுப்பினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
எதிர்க்கட்சிகளுக்குத்தான் சட்டப்பேரவையில் அதிக நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்  title=

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை நிகழ்த்தினார். அதுமட்டுமல்லாமல், அத்துறைகளுக்கான 78 புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார். 

மேலும் படிக்க | தமிழகத்தின் வரலாற்று 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டது - முக ஸ்டாலின்

இதன் பதிலுரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது. இன்றுடன் இந்தக் கூட்டம் முடிவடைகிறது. இந்த 22 நாட்களாக, அவை நடவடிக்கைகள் குறித்து ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆக்கப்பூர்வமாக இருந்தது. மேலும், மனப்பூர்வமாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஜனநாயகத்தின் அரங்கேற்ற மேடைதான் சட்டமன்றம். அந்த வகையில் நடந்துமுடிந்த இந்த சட்டமன்ற கூட்டத்தொடர், ஜனநாயக நெறிமுறைகளையும், மக்களாட்சியின் மாண்பைக் காக்க கூடிய வகையிலும் நடைபெற்றுள்ளது. சொல்லாடலில் சூடும் சுவையும் இருக்கலாம். அதே நேரத்தில் நாகரிகமும் பண்பாடும் குறைந்துவிடக் கூடாது ; அதை மறந்து விடவும் கூடாது ; அதை துறந்து விடவும் கூடாது என்றார் கருணாநிதி. அதன் காரணமாகத்தான் இந்த அரங்கம் நாகரீகம் மற்றும் பண்பாடால் தவழ்ந்தது. மோதிக் கொண்டவர்களாக இருந்தாலும் நாகரீகம் காக்க வேண்டும் என்று இரண்டு பக்கம் இருப்பவர்களும் உறுதி எடுத்துக் கொள்வோம். இந்த அளவுக்கு அவை சிறப்பாக நடைபெற காரணமாக அமைந்த நம்முடைய பேரவைத் தலைவரை மனதார பாராட்டுகிறேன். அவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். சபாநாயகர் அப்பாவு, பேரவைத் தலைவராக மட்டுமல்ல நமக்கெல்லாம் தலைமை ஆசிரியராகவும் நடந்து கொண்டார். 

மேலும் படிக்க | தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்: தடை நீக்கி உத்தரவு!

உள்ளத்தால் உயர்ந்த நமது பேரவைத் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்களை மட்டுமல்ல, ஆளும் கட்சி உறுப்பினர்களையும் வார்த்தைகளால் வழிநடத்தினார். அவருக்கு துணையாக பணியாற்றிய துணை சபாநாயகர், சட்டப்பேரவை செயலர்,  பேரவை அலுவலர் ஆகிய அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கூட்டத் தொடரில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகமாக பேசுவதற்கு வாய்ப்பு தரப்பட்டது. அதை நான் பெருமையாக கருதுகிறேன். அது எனக்கு உளமாற மன நிம்மதியை தருகிறது. நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக, அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கொறடா, பல்வேறு கட்சிகளைச் சார்ந்து இருக்கக்கூடிய சட்டமன்ற கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் நான் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அன்பில் மகேஷுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News