தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து....

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2018, 07:54 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து.... title=

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்....! 

தீபாவளி பண்டிகைக்காக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி திருநாள் தமிழக மக்கள் வாழ்வில் ஒளியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தட்டும் என கூறியுள்ளார். மேலும், தீபாவளி திருநாளுக்கு இதயப்பூர்வ வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும் என கூறியுள்ளார். அத்துடன், இருள் விலகி, புத்தொளி பிறக்கும் நன்னாளாக தீபாவளி விளங்குவதாகவும், முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், அதிமுக சார்பிலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட மனதார வாழ்த்துவதாகவும் கூறியுள்ளனர்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைத்திட மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டும் என்றும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோரும், தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Trending News