75 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறை... மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக கோடைக்காலத்தில் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 24, 2022, 01:03 PM IST
  • சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறை மே மாதம் தண்ணீர் திறப்பு
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்
  • 12 மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி
75 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறை... மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! title=

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 1925ம் ஆண்டு துவங்கி 1934ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்கான தண்ணீர், மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் திறந்து விடப்படுகிறது.குறுவை, தாளடி, சம்பா என்று 3 பருவங்களில் நடக்கும் சாகுபடிக்கு ஆண்டு தோறும் ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

அணையின் நீர்மட்டம் 95 அடிக்கு மேல் இருந்தால் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படும். அணைகட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் இது வரை 18 முறை மட்டுமே, குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடப்பாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தமழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியுள்ளது.

இதனால் வழக்கமான ஜூன் 12ம் தேதியில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் 19 நாட்களுக்கு முன்பாகவே இன்று (மே24ம் தேதி) மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியானது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து மே மாதம் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிப்பு விவசாயிகளை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. 

மேலும் படிக்க | பேரறிவாளன் விடுதலை பாஜகவின் மிகப் பெரிய சதி - மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு!

இந்தநிலையில் டெல்டா பாசன விவசாயிகளுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அணியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் மேல் பூக்களைத் தூவி வரவேற்றார். முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு இதுவரை 88 ஆண்டுகளில் 1936, 1937, 1938,1940, 19411942. 1943, 1944, 1945, 1946, 1947 ஆகிய ஆண்டுகளில் ஜுன் 12ம்தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது. இதே போல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட 2011ம் ஆண்டில் ஜூன் 12ம்தேதிக்கு முன்பாகவே அணை திறக்கப்பட்டுள்ளது. இதில் மே மாதத்தை பொறுத்த வரை 1947ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேட்டூர் அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் விளைநிலங்களும், கடலூரில் 30,800 ஏக்கர் விளைநிலங்களும் என 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். இதனால் அப்பகுதிகளில் பயன்பெற உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்..மத்திய அரசை சாடிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News