சாமியாரா? ரவுடி கூட்ட தலைவனா? உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்த சாமியார்!

Jagadguru Paramhans Acharya: உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்த சாமியார் ஒருவர், அவரின் தலையை எடுக்க தனது வாளும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 4, 2023, 07:21 PM IST
  • சனாதன தர்மத்தை யாரேனும் சீரழிக்க முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் - சாமியார்
  • உதயநிதி ஸ்டாலின் ஒரு தீய சக்தி ஆகிவிட்டார் - சாமியார்
  • அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியாரை அரசு கைது செய்யுமா?
சாமியாரா? ரவுடி கூட்ட தலைவனா? உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்த சாமியார்! title=

Jagadguru Paramhans Acharya vs Udhayanidhi Stalin: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக தெரிவித்த கருத்திற்கு நாடு முழுவதும் வலதுசாரி அமைப்புகளில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் அயோதியை சேர்ந்த பரம சாது சாமியார், பரம ஹன்ஸ் ஆச்சாரியா, சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை குத்தி கிழித்து எரித்துள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் எனவும் அறிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அதன் வேர்களைக் கொண்டுள்ளது எனவும் அந்த சாமியார் கருத்து தெரிவித்துள்ளார்.

'சனாதனத்துக்கு அழிவில்லை'

அயோத்தி துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா மேலும் கூறியதாவது, "சனாதன தர்மத்தின் வேர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்துதான் சில மதங்கள் தோன்றியுள்ளன. அதற்கு முன், பூமியில் ஒரே ஒரு மதம் தான் இருந்தது. அந்த மதம் சனாதன தர்மம். சனாதன தர்மத்திற்கு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. சனாதன தர்மம் என்றும் அழியாதது, அதனை அழிக்க முடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் சீரழிக்க முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்" என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். 

'நானே கொல்வேன்'

மேலும் கூறிய அவர்,"நான் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கிறேன். திமுக தலைவர் உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் தருவேன். அவரது தலையை யாரும் கொண்டு வரவில்லை என்றால், என் கையால் அவரது தலையை துண்டிப்பேன். திமுக தலைவரின் தலையை துண்டிக்க எனது வாளையும் தயார் செய்துள்ளேன்" என்றார். 

மேலும் படிக்க | 'இவர்கள் ராவணன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்' உதயநிதிக்கு எதிராக புகார்..! விரைவில் விசாரணை

உதயநிதி ஸ்டாலின் மற்ற மதங்களை பேசியிருந்தால், மற்ற மதங்களைப் பற்றி இப்படிச் சொல்லியிருந்தால் அவரின் தலையே போயிருக்கும். சனாதன தர்மம் மனிதாபிமானம், அகிம்சை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. நாங்கள் மனிதநேயம் கொண்டவர்கள். ஆனால் நாங்கள் தீய சக்திகளை அழிப்போம். உதயநிதி ஸ்டாலின் ஒரு தீய சக்தி ஆகிவிட்டார், என் கையால்தான் அவர் கொல்லப்படுவார் என்றார்.  

கொலை மிரட்டல்கள் புதிதல்ல

இந்த சாமியார் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது முதல் முறையல்ல. முன்னதாகவும் இதுபோன்று அவர் கொலை மிரட்டல்களையும், வெகுமதிகளையும் அறிவித்திருக்கிறார். முன்னதாக, ராமாயணம் தொடர்பான கவிதைக்கு எதிராக கருத்து தெரிவித்த பீகார் அமைச்சரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு எதிராகவும் மிரட்டல் விடுத்தார். அந்த நடிகரை சந்தித்தால் ஷாருக்கானை உயிருடன் எரித்து விடுவேன் என்று கூறினார். 'பேஷாரம் ரங்' பாடல் தொடர்பான சர்ச்சை தொடர்பாக அவர் கருத்து இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

நடவடிக்கை எடுக்குமா யோகி அரசு?

இந்த சாமியாரின் கருத்து தற்போது பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதாவது, சாமியார் ஒரு சிட்டிங் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்து தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கிறார் என்றால் அவர் என்ன மாதிரியான சாமியார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | சனாதன தர்மம்... நான் திரும்ப திரும்ப பேசுவேன் - உறுதியாக நிற்கும் உதயநிதி

குறிப்பாக, இதனை ஓர் ஆளும் அரசு அங்கீகரிக்கிறதா? அரசியல் ரீதியான எதிரெதிர் கருத்துகளை பேசுவது என்பது இயல்பு தான், ஆனால் சாமியார் என்பவர் 'ரவுடி கூட்ட தலைவன்' போல் பேசிகிறார் என்றால் அவர் பின்பற்றும் அல்லது போதிக்கும் கருத்துகள் நிச்சயம் சமூகத்துக்கு விஷமத் தனமானதாக தானே இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்கள் காவி போர்வையில் ஒளிந்திருக்கும் ரவுடி என்பதை தவிர அந்த சாமியார் வேறு யாராக இருக்க முடியும் எனவும் தங்களது சந்தேகங்களை எழுப்பி பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

தற்போது உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ள யோகி ஆதித்யநாத்தும் ஒரு சாது என்பதும், அவரும் முதலமைச்சராக பொறுப்பேற்கும் முன் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தவர் என்பது நினைவுக்கூரத்தக்கது. அந்த வகையில், தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்யாவிட்டால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை ரசிப்பதாக அமைந்துவிடும் எனவும் இது பின்னாளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் வழி வகுத்துவிடும் எனவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

உதயநிதி பேசியது என்ன?

சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் ஒப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது வலதுசாரிகளிடம் கண்டனத்தை எழுப்பியது. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரும் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த  விமர்சனங்களுக்குப் பதிலளித்த உதயநிதி, சனாதன தர்மத்தை மட்டுமே தான் விமர்சிப்பதாகவும், தொடர்ந்து அதைச் செய்வேன் எனவும் கூறினார். மேலும் தனது பேச்சை திரித்து பாஜகவினர் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தன் மீது என்ன வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் உத்யநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவுக்கு பயந்து, பாஜக நாட்டை திசை திருப்ப முயற்சிக்கிறது என்றார். மேலும், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதே திமுகவின் கொள்கை என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | 'டெங்கு, மலேரியா போன்றது சனாதனம்...' உதயநிதி பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு - பதிலடி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News