மீண்டும் வேகமெடுக்கும் கொடநாடு கொள்ளை வழக்கு - கைதாகபோவது யார்?

கொடநாடு கொள்ளை வழக்கில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அரசு, தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2021, 01:44 PM IST
மீண்டும் வேகமெடுக்கும் கொடநாடு கொள்ளை வழக்கு - கைதாகபோவது யார்? title=

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017, ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த 11 பேர் கொண்ட மர்ம கும்பல், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்த கும்பல், இந்த சம்பவத்தின்போது காவலாளியாக இருந்த ஓம் பகதூரை கொலை செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், ஜெம்சீர் அலி, சந்தோஷ் சாமி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ALSO READ | ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்த ’செக்’..! லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டம்

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேநாளில் 2வது குற்றவாளி சயான், குடும்பத்தினருடன் கேரளாவில் சாலை விபத்தில் சிக்கினார். படுகாயங்களுடன் சயான் உயிர்தப்பிய நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தை பரிதாபமாக இறந்தனர். பின்னர், சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கொடநாடு எஸ்டேட்டில் கணிணி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்ததால், சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், எஸ்டேட் பங்குதாரர் விவேக் ஜெயராமன், கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் உள்ளிட்டோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

ALSO READ | உத்தரபிரதேசத்துக்கு ஒரு நியதி? தமிழகத்துக்கு ஒரு நியதியா? MP சு.வெங்கடேசன் கேள்வி

நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணைக்கு கூடுதல் காலவகாசம் கேட்டு, காவல்துறை சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை அடுத்தமாதம் 28 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் ஷாஜகான், கொடநாடு கொலை கொள்ளை சம்பந்தமாக நடத்தப்படும் மறுவிசாரணையில் 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த அவர், தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News