வாக்குப்பதிவு ஏப்ரல் 18: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2019, 06:25 PM IST
வாக்குப்பதிவு ஏப்ரல் 18: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு title=

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைந்தது. அதில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தகள் நடைபெற உள்ளது. அதேநாளில் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலை பொருத்தவரை, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், அசாம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் 5 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகளிலும், மணிப்பூர், திரிபுரா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 1 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மேலும் ஒடிஷா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைப்பெற உள்ளது. 

இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இன்று மாலை 6 மணி முதல் வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை எந்த அரசியல் கட்சியும் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தக்கூடாது. மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Trending News