மதுரை தொகுதிக்கு மார்க்சிஸ்ட் குறி.. அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்

DMK Alliance: மதுரை நாடாளுமன்ற தொகுதியை கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கிய நிலையில், இம்முறையும் அத்தொகுதியை அக்கட்சி கேட்டிருக்கிறது. ஆனால், அங்கு திமுகவே நேரடியாக களம் காண வேண்டும் என உடன் பிறப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 17, 2024, 07:16 AM IST
  • மதுரை தொகுதியை கேட்கும் மார்க்சிஸ்ட்
  • இம்முறை திமுக அங்கு போட்டியிட திட்டம்
  • எம்பி சு.வெங்கடேசனின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
மதுரை தொகுதிக்கு மார்க்சிஸ்ட் குறி.. அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் title=

நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக நிறைவு செய்திருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, மார்க்சிஸ்ட் கட்சிகள் தாங்கள் போட்டியிட விருப்பும் தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளனர். அதில் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்தமுறை மதுரை தொகுதியில் போட்டியிட்டது. இம்முறையும் அந்த தொகுதியில் தாங்கள் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் நடந்த, அக்கட்சி எம்பி சு.வெங்கடேசன் மதுரை தொகுதிக்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.  

மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த 5 ஆண்டுகளில், தான் செய்த எம்.பி. பணியில் பெற்ற 150 வெற்றிகளைக் குறிப்பிட்டு 5 ஆண்டுகள் - 150 ஆண்டுகள் என்ற நூலை எழுதி உள்ளார். மதுரையில் நடந்த அதன் வெளியீட்டு விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட, முதல் பிரதியை தமிழக வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி பெற்றுக் கொண்டார். திமுக எம்எல்ஏ தளபதி, மதிமுக எம்எல்ஏ பூமி நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.பாலகிருஷ்ணன், " மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புத் திட்டங்கள், மாணவர்களுக்கு இந்தியா அளவில் எந்த எம்பியும் செய்யாத வங்கிகளிலிருந்து 500 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக் கடன் பெற்றுக் கொடுத்தது, நூலகங்கள் வார்டு தோறும் அமைத்துக் கொடுத்தது, மதுரை தெப்பக் குளத்திற்கு நிரந்தரமாக வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வரத்து ஏற்படுத்தியது, உயர் கோபுர மின் விளக்குகள் தெப்பக் குளத்தை சுற்றுலாத் தளமாக்கியது என இந்த நூலில் எழுதி உள்ள 150 வெற்றிகள் மட்டுமல்ல, எழுதாத எண்ணற்ற வெற்றிகளை தனது எம். பி. நிதியிலிருந்து 25 கோடிக்கும் மேல் செலவழித்து மக்கள் பணியாற்றி உள்ளார்.

மத்திய அரசுப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு ரத்து செய்ய முயன்ற மோடி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து தடுத்து இருக்கிறார். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு உள்ளதாக முதலில் சென்று பார்த்துச் சொன்னவரும் சு.வெங்கடேசன் தான்.  வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியத் தேர்தல். இந்த தேர்தலில் பிஜேபி ஜெயித்து ஆட்சி அமைத்தால் இதுதான் இந்தியாவிற்கு கடைசி தேர்தல். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அபாயகரமானது. ஜனநாயகத்தைக் குழித் தோண்டி புதைத்து விடும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க முயலும் மோடி அரசு, இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்தாள சூழ்ச்சி செய்கிறது. 

மக்கள் தொகை கட்டுப்பாடாக உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்து, மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம் உள்ள பீகார், உத்தரப்பிரதேத்தில் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, மக்கள் தொகைக்கு ஏற்ப, நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய மோடி அரசு முயல்கிறது. தமிழகத்தில் பிஜேபி வேட்பாளர்கள் டெபாசிட் கண்டிப்பாக வாங்க முடியாது. மீண்டும் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. தேர்தலில் போட்டியிட திமுக தலைவர்களிடம் விருப்பம் தெரிவித்து உள்ளோம். வரும் தேர்தலில், கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிப் பெற வேண்டும்" என கூறினார். இருப்பினும், திமுக நிர்வாகிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News