தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

POCSO : தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் படி தமிழகத்தில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் கடந்த ஆண்டை விட 16.2% அதிகரித்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Sep 6, 2022, 03:42 PM IST
  • தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
  • என்சிஆர்பி அறிக்கையில் தகவல்
  • அதிக பாதிப்புக்குள்ளான பெண் குழந்தைகள்
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு title=

என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக மொத்தம் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 404 வழக்குகள் பதிவாகி உள்ளன.இது 2020-ம் ஆண்டை விட 16 புள்ளி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 531 வழக்குகள் பதிவாகி உள்ளன. 

2021-ம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், சுமார் 38 சதவீதம் வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல் ஆகும். NCRB தகவலின்படி, 2021-ம் ஆண்டில் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 3 ஆயிரத்து 459 பேர் ஆவர். வயது வாரியாக பார்க்கும் போது 6 வயதுக்குட்பட்ட 52 குழந்தைகள் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 50 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் அடங்கும். 6 வயதில் இருந்து 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 226 சிறுமிகளும், 16 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  12 வயதில் இருந்து 16 வயதுக்கு உட்பட்டவர்களில், ஆயிரத்து 389 சிறுமிகளும், 11 சிறுவர்களும் உள்ளனர். 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களில் ஆயிரத்து 770 சிறுமிகளும், 5 சிறுவர்களும் உள்ளனர். 

மேலும், மொத்தம் பதிவான 3 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளில் 99.5 சதவீதம் குற்றங்கள், குழந்தைகளுக்கு தெரிந்தவர்களாலேயே இழைக்கப்பட்டுள்ளன. என்.சி.ஆர்.பி. தரவுகளின் படி, 292 குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். 956 பேர் குடும்ப நண்பர்கள், அண்டை வீட்டார் என தெரிந்தவர்களாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் நண்பர்கள், இணையவழி நண்பர்கள் உள்ளிட்டோரால் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகியுள்ளனர். 

மேலும் படிக்க | பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கடலில் வீசி கொலை!

சட்டத்துடன் முரண்படும் சிறுவர்கள்

2021 ஆம் ஆண்டில் சிறார்களுக்கு எதிராக மொத்தம் 31,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ம் ஆண்டை விட 4.7% (29,768 வழக்குகள்) அதிகம் ஆகும். மொத்தமுள்ள 31,170 வழக்குகளில் 37,444 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் 16 வயது முதல் 18 வயது வரை (76.2%) (37,444 பேரில் 28,539 பேர்) உள்ளவர்கள் ஆவர்.

கடத்தல்
2021-ம் ஆண்டு மொத்தம் 2,189 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ம் ஆண்டை விட 27.7% அதிகம் ஆகும். மொத்தம் 6,533 பேர் கடத்தப்பட்ட நிலையில், அவர்களில் அவர்களில் 2,877 குழந்தைகள் ஆவர். இந்த வழக்குகள் தொடர்பாக 5,755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை என்பது பதிவான வழக்குகளின் தரவு ஆகும். நம் நாட்டில் நடைபெறும் குற்றங்களில் அதிலும் குறிப்பாக பாலியல் குற்றங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. அதன்படி பார்க்கும்போது, கண்டிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | பேருந்தில் பெண் குழந்தையை விட்டு சென்ற பெண்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News