ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : ஓகே செய்த அமைச்சரவை... ஒப்புதல் அளிப்பாரா ஆளுநர்?

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2022, 07:20 PM IST
  • ஆன்லைன் ரம்மி தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
  • தடைச்சட்டம் குறித்து தமிழ்நாடு அரசு மக்களிடம் கருத்து கேட்டது.
  • தற்போது, இந்த சட்டம் ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : ஓகே செய்த அமைச்சரவை... ஒப்புதல் அளிப்பாரா ஆளுநர்? title=

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதனையடுத்து, ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றனர்.

தொடர்ந்து, நீதிபதி சந்துரு தலைமையிலான அந்த குழு, ஆன்லைன் விளையாட்டுகள் திறன்கள், அதனால் ஏற்படும் தீமைகள், ஏற்படும் நிதியிழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தது மட்டுமில்லாமல், ஆன்லைன் விளையாட்டுகளில் பண பணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மிக்கு எதிராகப் புதிய சட்டம் - நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பரிந்துரை

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதவை உருவாக்குவதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த குழு, ஜூன் 27ஆம் தேதி அன்று தனது அறிக்கையினை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டுகளை தடை விதிப்பது குறித்து பொதுமக்களிடமும் தமிழ்நாடு அரசு கருத்து கேட்டது.

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தின் வரைவு கடந்த ஆக.29ஆம் தேதி அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

அக்கூட்டத்தில், இந்த அவசர சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, இன்று (செப். 26) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது, ஏற்கெனவே 21 தீர்மானங்கள் ஆளுநரிடம் கிடப்பில் உள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளிப்பாரா என அரசியல் வட்டாராத்தில் கேள்வியெழுந்துள்ளது. 

மேலும் படிக்க | நடப்பவைத் தற்கொலையல்ல ; கொலை.! - ஆன்லைன் ரம்மி - ஓர் பகீர் பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News